சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
நர்மதா: நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது உலகின் 2-வது மிகப் பெரிய அணையாகும்.
நர்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்ட நாட்டின் முதலாவது பிரதமர் ஜஹவர்லால் நேரு 1961-ம் ஆண்டு ஏப்ரல் 5ந் தேதி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 30 மதகுகளைக் கொண்டது. இந்த மதகுகளை மூடுவதற்கு 1 மணிநேரமாகும்.
சர்தார் சரோவர் அணை கட்ட மொத்தம் ரூ16,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுமானத்துக்கு எதிராக மேதா பட்கர் தலைமையில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த அணை கட்டுமானத்துக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.
1.2 கி.மீ நீளமுள்ள இந்த அணையால் 18 லட்சம் ஹெக்டேர் விளைநிலம் பயனடையும். இன்று 67-வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
நர்மதை மாவட்டத்தின் கேவதியாவில் சர்தார் சரோவர் அணை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.