பெங்களூரில் மட்டும் 170 ஜெர்மனி நிறுவனங்கள்: மெர்க்கல் பெருமிதம்-மோடி மகிழ்ச்சி
பெங்களூர்: பெங்களூரில் சுமார் 170 ஜெர்மனி நிறுவனங்கள் இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பற்றி தெரிவிக்கிறது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெரிக்கல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்ற நாஸ்காம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்தியா, ஜெர்மனியை சேர்ந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மெர்க்கல் கூறுகையில்,
பெங்களூரில் சுமார் 170 ஜெர்மனி நிறுவனங்கள் இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பற்றி தெரிவிக்கிறது. டிஜிட்டல் மயமாக்கல், உள்கட்டமைப்பு, எரிசக்தி வினியோகம் உள்ளிட்டவற்றில் நம் நாடுகளுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது என்றார்.
இதையடுத்து பேசிய மோடி கூறுகையில்,
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது. நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதை 2016ம் ஆண்டு அமல்படுத்துவோம். இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் கணித்துள்ளன.
கடந்த 15 மாதங்களில் உலக மேடையில் இந்தியாவின் நன்பகத்தன்மையை மீட்டுள்ளோம். முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் கண்டுபிடிப்புகளின் உரிமங்களை பாதுகாப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
ஐ.டி. புரட்சியின் விளிம்பில் உள்ளோம். வெளியில் இருந்து திறமை, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டை ஏற்க இந்தியா தயாராக உள்ளது. அதனால் தான் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறுகிறது என்றார்.