மக்களை திசை திருப்பும் வகையில் பேசுகிறார் மோடி- காங்.
டெல்லி: ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதில்லை, பேசியதில்லை. நாட்டு மக்களைத் திசை திருப்பும் வகையில் பேசுகிறார் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இன்று டெல்லியில் நடந்த பாஜக கூட்டத்தில் மோடி பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் எடுத்த முடிவை நான்சென்ஸ் என்று ராகுல் காந்தி கூறியது பிரதமரை அவமதிக்கும் செயல் என்று சாடியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ரஷீத் அல்வி கூறுகையில், ராகுல் காந்தி ஒரு இடத்திலும் பிரதமரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தனது கருத்துக்களை மட்டுமே அவர் தெரிவித்திருந்தார். மேலும் அதை அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூட அவர் கோரிக்கை வைக்கவில்லை.
ஆனால் மோடிதான் தனது பேச்சின் மூலமாக பிரதமரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். பிரதமர் நாட்டிலேயே இல்லாத நிலையில் அவரைப் பற்றி பேசியுள்ளார் மோடி. நாட்டின் நலனுக்காக நியூயார்க்கில் பலரையும் பிரதமர் சந்தித்துப் பேசி வரும் நிலையில் அவரை தேவையல்லாமல் இழுத்துள்ளார் மோடி.
குஜராத் மக்கள்தான் மோடியின் உயர்வுக்குக் காரணம். அந்த மாநில மக்கள்தான் அவரை முதல்வராக்கினர். ஆனால் அந்த மாநிலம் தற்போது கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில் அதைப் புறக்கணிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் மோடி.
இப்போது குஜராத் மக்களுக்கு மோடி தேவை. ஆனால் அவரோ தனது மக்களை விட்டு விட்டு டெல்லியில் வந்து நாட்டு மக்களைத் திசை திருப்பும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார் என்றார் அல்வி.