குறைந்த கட்டணத்தில் ஏழைகளுக்கான ஏ.சி. ரயில்: பட்ஜெட்டில் நாளை அறிவிக்கப்படுகிறது
டெல்லி: நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் குறைந்த கட்டணத்திலான ஏழைகளுக்கான ஏ.சி. ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நாளை மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரயில் கட்டணத்தில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த கட்டண மாற்றம் ஏழைகளை பாதிக்காத வகையில் இருக்கும் என்று தெரிகிறது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னுரிமை கொடுக்க உள்ளார். எனவே அதற்காக அவர் ரயில் கட்டணம் மீது கூடுதலாக 3 சதவீத வரி விதிப்பார் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஏழைகளும் ஏ.சி. ரயிலில் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதை ஏற்று பாரத் கவுரவ் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்ற பெயரில் ஏ.சி. ரயில்கள் நாளைய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏ.சி. ரயில்களில் பயணக் கட்டணமும் மிகவும் குறைவாக இருக்கும். வழக்கமான ரயில்களில் உள்ள மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டி கட்டணத்தை விட ஏழைகளுக்கான ஏ.சி. ரயில்களில் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அம்மாநிலத்துக்கு புதிதாக 5 சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் விடப்படும் வாய்ப்புள்ளது.
சுற்றுலா பயணிகளை கவர டெல்லி-ஆக்ரா இடையே பிரத்யேக ரயில்பாதை அமைக்கும் திட்டமும் நாளை வெளியிடப்படலாம். இது தவிர அதிவேக ரயில்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும்.
சென்னை-பெங்களூர், டெல்லி-சண்டிகார், மும்பை-ஆமதாபாத் இடையே அதிவேக ரயில்கள் விடப்பட உள்ளது. இதற்காக ஜப்பானில் இருந்து 10 அதிவேக ரயில்கள் இறக்குமதி செய்யும் திட்டம் பற்றியும் நாளைய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்.
பிரதமர் மோடியை தேர்வு செய்த வாரணாசி தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அந்த தொகுதியை சேர்ந்த 1000 பேருக்கு வேலை கிடைக்க ரயில் பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறலாம்..