நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் வன்முறையை சகிக்கமுடியாது - பிரதமர் மோடி
பிரதமர் மோடி மான்கீ பாத் உரையில், நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளார்.
டெல்லி: நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என மான்கீ பாத் உரையில் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
இன்று காலை வானொலியில் பிரதமர் மோடி 'மான்கீ பாத்' உரையாற்றினார். அதில் பிரதமர் மோடி கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்தைத் தெரிவித்தார். அதன்பிறகு நம்பிக்கை என்ற பெயரில் நாட்டில் நடக்கும் வன்முறைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என கூறினார்.
கடந்த மூன்று நாட்களாக பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் சாமியார் ராம் ரஹீம் சிங்கின் பக்தர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறையில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை வழக்கை விசாரித்த பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யா பால் ஜெயின் ஆஜரானார்.
அப்போது அவர், இது மாநில அரசின் பிரச்சனை என தன் வாதத்தில் குறிப்பிட்டார். இதனால் கோபமடைந்த நீதிமன்றம், பிரதமர் மோடி மொத்த இந்தியாவுக்கும் பிரதமர். பாஜகவுக்கு மட்டும் அவர் பிரதமர் அல்ல என கடுமையான கோபத்துடன் குறிப்பிட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி மான்கீ பாத் உரையில் வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது என கூறியது குறிப்பிடத்தக்கது.