பிரதமரை அவமதித்து விட்டார் ராகுல் காந்தி - மோடி தாக்கு
டெல்லி: டெல்லியில் ஒரு ஆட்சிக்குள் பல ஆட்சிகள் நடக்கின்றன. அம்மா ஆட்சி ஒரு பக்கம், மகன் ஆட்சி மறுபக்கம். கூட்டணிக் கட்சிகள் தனி ஆட்சியை நடத்துகின்றன. பிரதமரை ராகுல் காந்தி நான்சென்ஸ் என்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார் பிரதமர். இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அடியோடு விரட்டியாக வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
டெல்லியில் இன்று நடந்த விகாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் நரேந்திர மோடி. காங்கிரஸையும், காங்கிரஸ் கூட்டணி அரசையும், டெல்லி அரசையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் கடுமையாக விமர்சித்து அவர் பேசினார்.
மோடியின் பேச்சு...
பல வரலாறுகளைப் படைத்தவர்கள் டெல்லி மக்கள். இப்படி ஒரு கூட்டத்தை இதற்கு முன்பு டெல்லி கண்டதில்லை. இதற்காக அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இயற்கையும் நம் பக்கம் உள்ளது.
டெல்லியில் இன்று பல ஆட்சிகள் நடைபெறுகின்றன. அம்மா ஒரு பக்கம் ஆட்சி புரிகிறார், மகன் ஒரு பக்கம் ஆட்சி நடத்துகிறார். கூட்டணி கட்சிகள் தனி ஆட்சி நடத்துகிறார்கள். ஒரு ஆட்சிக்குள் பல ஆட்சிகள் இங்குதான் நடக்கிறது
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வெறும் ரிப்பன்களை வெட்டும் வேலையை மட்டுமே செய்கிறார். அவர்தான் இந்தியாவிலேயே மிகவும் மகிழ்ச்சியான முதல்வர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், கட்சிகள் அனைத்தும் தங்களது குறைகளை பிறரிடம் தள்ளி விடுவதிலேயே கவனம் செலுத்துகின்றன். கூட்டணி இருக்கிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதிலேயே கவனமாக உள்ளனர். கை கோர்த்து செயல்படுவதில்லை.
ஆனால் வாஜ்பாய், அத்வானி காலத்தில் அப்படி இருந்ததில்லை.
கூட்டணி ஆட்சிகள் எண்ணிக்கையின் அடிப்படையி்ல்தான் அமைகின்றன. ஆனால் கெமிஸ்ட்ரி அடிப்படையில்தான் அவை நடக்கின்றன.
காமன்வெல்த் போட்டி ஊழலால் டெல்லியை சர்வதேச அளவில் கெட்டபெயருக்குள்ளாக்கி விட்டார் ஷீலா தீட்சித்.
பல நாடுகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பிரபலமாகியுள்ளன. தென் கொரியாவைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள். ஆனால் இந்தியாவின் பெயரைக் கெடுத்து விட்டது டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல்.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் நடக்கும்போதெல்லாம் நான் அதிர்ச்சி அடைகிறேன் என்று கூறுகிறார் ஷீலா தீட்சித். பின்னர் பெண்கள் வெளியில் போனால் சீக்கிரம் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். எல்லா வீட்டிலும் இதைத்தான் சொல்வார்கள். பிறகு எதற்கு தனியாக ஒரு முதல்வர்...
தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டது. ஆனால் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, காந்திகளுக்கு விசுவாசமாக உள்ளவர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது, போஷிக்கிறது.
காந்திகள் மீதானி விசுவாசம் மட்டுமே எடுபடுகிறது. அந்த காந்தி மீது மரியாதை போய் விட்டது. இந்த காந்திகள் மட்டுமே மதிக்கப்படுகிறார்கள். பணத்தை சுரண்டி காந்திக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.
எப்போது ஒரு நிர்வாகத்தில் மோசமான நிர்வாகம் புகுகிறதோ, அன்றே ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்து போய் விடும். சுயராஜ்ஜியம் அடைந்து பல வருடங்களைத் தாண்டியும், இந்தியா இன்னும் நல்லாட்சியை காண முடியாத நிலை உள்ளது.
நமது இளைஞர்கள் வேலை செய்யத் தயாராக உள்ளனர். ஆனால் மத்திய அரசு வேலை தரத் தவறி விட்டது. வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறி விட்டது.
உலக நாடுகள் வேகமாக முன்னேறுகின்றன. ஆனால், நாமோ வேகமாக பின்னுக்குப் போய்க் கொண்டுள்ளோம். உலக நாடுகள் முன்பு நாம் நகைச்சுவைப் பொருளாக காட்சி தருகிறோம்.
ரயில்வேயில் சீனா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பல துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் நாம் பின்தங்கியுள்ளோம்.
தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதிலும் நாம் பின் தங்கியுள்ளோம். தொலை தூரத்தில் உள்ளோம். விமானத்துறையிலும் நாம் பெரும் கடனாளியாக இருக்கிறோம்.
பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கப் போகிறார் மன்மோகன் சிங். அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நமது பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் நவாஸ் ஷெரீப் பேசுகிறார். அதற்கு நமது அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை.
பிரதமர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். அவரிடம், நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். எனது நாடு ஏழை நாடு என்று பேசுகிறார். ஏன் நமது நாட்டின் பலங்களை அவரிடம் சொல்ல மறுக்கிறீர்கள் நீங்கள். நாம் ஏழைகள் அல்ல என்பதை ஏன் நீங்கள் சொல்ல மறுக்கிறீர்கள். நாட்டுக்கு எவ்வளவு பெரிய கேவலம் இது. உங்களுக்கு இந்த நாட்டின் ஏழ்மை வியாபாரப் பொருளாகி விட்டது...
காங்கிரஸ் கட்சியே நமது பிரதமரை மதிப்பதில்லை. பிறகு ஷெரீப் எப்படி மதிப்பார்.
ராகுல் காந்தி பிரதமரை மதிப்பதில்லை. இப்போது கூட நான்சென்ஸ் என்று கூறிப் பேசுகிறார் அவர்.
என்னைப் பற்றி ஒபாமாவிடம் புகார் கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங் என்று கூறுகிறார் ஷெரீப். என்ன தைரியம் அவருக்கு... ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை நமது பிரதமர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரைத் திரும்பத் தாருங்கள் என்று பாகிஸ்தான் பிரதமரிடம் அவர் கேட்பாரா.... எல்லையில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட நமது வீரர்களின் குடும்பத்தினரின் குரல்களை பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவிப்பாரா... பிறகு ஷெரீப்பிடம் என்னதான் பேசப் போகிறார் மன்மோகன் சிங்.
நான் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைக் கேட்க விரும்புகிறேன் - நீங்கள் காங்கிரஸின் பட்டத்து இளவரசன் தலைமையில் செயல்பட விரும்புகிறீர்களா அல்லது இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் கீழ் செயல்பட விரும்புகிறீர்களா...
காங்கிரஸின் பட்டத்து இளவரசன், பிரதமரின் பாஸ் போல செயல்படுகிறார். அவரால், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளிடமும் இதேபோல செயல்பட முடியுமா...
2014 ம் ஆண்டு கனவு அணியை நமது நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். அசிங்கமான அணி அவர்களுக்குத் தேவையில்லை.
இந்தியாவுக்குத் தேவை கனவுதான். இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள், தவிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை தரும் கனவு நமது மத்திய அரசிடம் இல்லை.
ஒவ்வொரு முறை ரயில்வே பட்ஜெட் வரும்போதும் நாம் கேட்பது கட்டணம் குறைந்திருக்கிறதா அல்லது உயர்ந்திருக்கிறதா என்று. பட்ஜெட் வரும்போது சென்செக்ஸ் உயர்ந்திருக்கிறதா, சரிந்திருக்கிறதா என்று. எதுதான் நமக்கேற்ற பட்ஜெட், நமக்கான பட்ஜெட்... அரசிடம் கனவு இல்லை.
நான் உங்கள் சேவகன், மக்கள் சேவகன். மக்களுக்கான எனது சேவை தொடரும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன். உங்கள் கனவை நான் நிறைவேற்றுவேன்.
அத்வானி, வாஜ்பாய், குஷாபாவ் தாக்கரே ஆகியோரிடமிருந்து நாம் நிறைய கற்றிருக்கிறோம். உங்களுக்காக சேவை செய்ய நான் வந்துள்ளேன். பாஜகவை நம்புங்கள். பாஜகவோ அல்லது மோடியோ, உங்களையும், உங்களது கனவையும் கலைக்க மாட்டார்கள், துரோகம் செய்ய மாட்டார்கள்.
நான் சர்வாதிகாரி அல்ல, வேலைக்காரன். பாஜக ஒரு ஜனநாயகக் கட்சி. சாதாரண மனிதனாக இருந்து நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்காக உங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று பேசி தனது உரையை நிறைவு செய்தார் நரேந்திர மோடி.
தனது பேச்சை நிறைவு செய்த மோடி, வந்தே என்று சொன்னார். அதைத் தொடர்ந்து பாஜகவினர் மாதரம் என்று கோஷமிட்டனர். வந்தே என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப வேகமாக தொடர்ந்து கூறினார் மோடி. இந்த வார்த்தை வாஷிங்டனில் அமர்ந்துள்ள நமது பிரதமருக்குக் கேட்டு அவருக்கு ஊக்கம் தரட்டும் என்றும்மோடி தனது பேச்சின்போது கூறியதால் பாஜகவினர் படு உற்சாகமாக மாதரம் என்று திரும்பத் திரும்பக் கோஷமிட்டனர்.
<center><center><center><center><center><center><center><center><center><center><center><center><center><center><center><iframe width="100%" height="315" src="//www.youtube.com/embed/XDbdfmlp3Sg" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center></center></center></center></center></center></center></center></center></center></center></center></center>