மக்களின் எதிர்பார்ப்பிற்கு மத்திய அரசு பணி செய்யும்: கருணாநிதிக்கு மோடி பதில் கடிதம்
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்துக் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அவர் தன்னுடைய கடிதத்தில், "நாட்டு மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் மத்தியில் அமைந்துள்ள அரசு செயல்படும்" என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது. அவருடன் 45 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அதற்கு வாழ்த்து தெரிவித்து, திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்து ஜூன் 10 அன்று எழுதிய கடிதத்தில், "எனக்கு வாழ்த்து தெரிவித்து, கடிதம் எழுதியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தலை வணங்குகிறோம்.
மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு செயல்படும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.