உலகில் முதல் முறையாக.. குஜராத்தில் அமைகிறது உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம்!
காந்தி நகர்: உலகிலேயே முதன் முறையாக இந்தியாவில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவ உலக சுகாதார அமைப்பு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த உலகளாவிய மையம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அமைய உள்ளது.
உலகில் முதல் முறையாக இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருந்தது.
இதுதொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

ஒப்பந்தம் கையெழுத்து
இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு இடையே நேற்று கையெழுத்தானது. இந்த மையம் ஏப்ரல் 21ல் இருந்து முறைப்படி துவங்கப்பட உள்ளது.

பாரம்பரிய மருந்து திறன்
முதற்கட்டமாக குஜராத்தில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த மையம் தற்காலிகமாக செயல்பட உள்ளது. மத்திய அரசின் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் அறிவியல், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாரம்பரிய மருந்துகளின் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த மையம் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

பலத்தை காட்ட வாய்ப்பு
இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சர் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறுகையில், ‛‛குஜராத் ஜாம்நகரில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை நிறுவுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார நிறுவனத்தின் ஒரே உலகளாவிய மையமாக இது இருக்கும். பாரம்பரிய மருத்துவத்தில் நமது பலத்தை காட்ட ஒரு வாய்ப்பு'' என கூறியுள்ளார்.

வெற்றியை எதிர்நோக்கி
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், "அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையை வழங்குவதை உறுதி செய்வது உலக சுகாதார அமைப்பின் பணிகளில் முக்கியமானது. பாரம்பரிய மருத்துவத்திற்கான ஆதார தளத்தை வலுப்படுத்த இந்த புதிய மையம் உதவும். இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி உடையவனாக இருப்பேன். இதனை வெற்றியடைய செய்வதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்'' என கூறியுள்ளார்.

மோடி பெருமிதம்
இதற்கிடையே, இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ‛‛ உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்துக்கான ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் அதிநவீன வசதிகளைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த மையம் ஒரு ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்குவதற்கும், உலகளாவிய நன்மைக்கும் பயன்படும். மேலும் நமது பாரம்பரிய மருத்துவ முறையை மேம்படுத்துவதற்கும் உதவும்" என தெரிவித்துள்ளார்.

80 சதவீதம் பேருக்கு பயன்பாடு
உலகளவில் பாரம்பரிய மருத்துவத்தை சுமார் 80 சதவீதம் பேர் பின்பற்றி வருகின்றனர். உலக சுகாதார அமைப்பில் அங்கம் வகிக்கும் 19 நாடுகளில் 170 நாடுகள் பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவதாக கூறியுள்ளன. அத்துடன் இந்த மருத்துவ நடைமுறைகளை மேம்படுத்தி, நம்பகமான சான்றுகளுடன் தயாரிப்புகளை அதிகரிக்க கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications