விவசாயிகள் போராட்டம்.. கொந்தளிப்பில் ம.பி.. உண்ணாவிரதத்தில் உட்கார்ந்த முதல்வர்!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரை போலீஸார் சுட்டுக் கொன்ற நிலையில் அமைதி திரும்பக் கோரி இன்று அங்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அமைதி உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
பாஜக ஆட்சியின் கீழ் உள்ளது மத்தியப் பிரதேசம். இங்குள்ள மான்ட்சார் நகரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் முரட்டுத்தனமாக நடவடிக்கையில் இறங்கினர். இதில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

இது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் போராட்டம் பரவியுள்ளது. இதனால் பதட்டம் நிலவி வருகிறது. மத்திய படையினரும் மத்தியப் பிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் செளகான் அறிவித்தார். அதன்படி தசரா மைதானத்தில் இன்று உண்ணாவிரதத்தில் அவர் குதித்தார். உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தபடியே தனது அரசு வேலைகளையும் செய்து வருகிறார் செளகான்.
முதல்வரே உண்ணாவிரதம் இருப்பதால் ம.பியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications