விமானம் போல பறந்த மும்பை ‘மோனோ’ ரயில்... முதல் நாளில் மட்டும் 20,000 பேர் பயணம்!
மும்பை: மும்பையில் அறிமுகம் செய்யப் பட்டுள்ள மோனோ ரயிலில் முதல் தினமான நேற்று மட்டும் சுமார் இருபதாயிரம் பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை நகரின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அம்மாநில அரசு மோனோ ரயில் திட்டத்தை கொண்டுவந்தது. கடண்டஹ் 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் திட்டப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முந்தினம் செம்பூர்- வடாலா இடையிலான மோனோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
மோனோ ரயிலின் முதல் ஓட்டத்தை அம்மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவான் தொடக்கி வைத்தார். இதன் மூலம் நாட்டின் முதல் மோனோ ரயில் இயக்கப்படும் மாநிலம் என்ற பெருமையை மராட்டியம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்வம்....
அதனைத் தொடர்ந்து நேற்று செயல்பாட்டிற்கு வந்த மோனோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலை 2 மணிக்கே ரயில் நிலையத்திற்கு வரத் தொடக்கினர். இதனால் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
டோக்கன் முறை...
காலை 6 மணிக்கு டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டது. டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக பயணிகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள் பயணிகளுக்கு டோக்கன் விநியோகம் செய்யப் பட்டு வரிசையில் நிற்க வைத்தனர்.
ஆரவாரத்தோடு பயணம்....
காலை 7 மணிக்கு முதல் மோனோ ரயில் பிளாட்பாரத்திற்கு வந்ததையடுத்து, காத்திருந்த பயணிகள் ஆரவாரத்தோடு ரயில் பெட்டிகளில் ஏறினர். சிலர் அதீத மகிழ்ச்சியில் தேசியக் கொடிகளை கைகளில் எந்தி வந்ததையும் பார்க்க முடிந்தது.
அழகான மும்பை....
சரியாக காலை 7.15 மணிக்கு தொடங்கியது முதல் மோனோ ரயில் பயணம். வடாலாவில் இருந்து செம்பூர் நோக்கி 50 கிலோ மீட்டர் வேகத்தில் புறப்பட்ட அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் ரயில் பெட்டியில் உள்ள ஜன்னல் வழியாக இருபுறமும் மும்பையின் காட்சிகளை ரசித்தனராம். மொத்தம் 4 பெட்டிகளைக் கொண்ட மோனோ ரயிலில் செம்பூரிலிருந்து வடவாலாவைச் சென்றடைய சரியாக 19 நிமிடங்கள் ஆனதாம்.
விமானம் போல் பறந்த ரயில்....
நேற்றைய தினம் மோனோ ரயில்களில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் பயண ரீதியில் அல்லாமல் முதல் நாளில் இயக்கப்படும் மோனோ ரயிலில் சவாரி செய்ய வேண்டும் என்ற ஆசையிலேயே வந்திருந்தனர். மோனோ ரயில் பயணம் விமானத்தில் பறப்பது போல் இருந்ததாக பயணிகள் கருத்துத் தெரிவித்தனர்.
நீட்டிப்பு....
முதலில் மதியம் 3 மணி வரை மட்டும் மோனோ ரயில் சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மதியம் 2.30 மணியுடன் டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டன. ஆனால் டிக்கெட் எடுத்து விட்டு ரயிலில் பயணம் செய்யாமல் ஏராளமான பயணிகள் காத்திருந்ததால், நேற்று மாலை 4.30 மணி வரை மோனோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
20,000 பயணிகள்...
மொத்தம் 61முறை செம்பூர்-வடாலா இடையே பயணத்தை மேற்கொண்ட மோனோ ரயிலில் முதல் நாளான நேற்று மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக ரயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.