அல்கொய்தாவின் ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை: இந்திய முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு
மும்பை: இந்தியாவில் அல்கொய்தா இயக்கம் கிளை தொடங்குவதை ஏற்க முடியாது என்றூ இந்திய முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளன.
அல்கொய்தா தீவிரவாத இயக்கம் இந்தியாவில் தனது கிளையை தொடங்க இருப்பதாகவும், குஜராத், ஆமதாபாத், அஸ்ஸாம், காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களை பாதுகாக்க போரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்பு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அகில இந்திய உலமா கவுன்சில் பொது செயலாளர் மவுலானா மெகமூத் தார்யாபி கூறியதாவது:-
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அனைத்து வகையான சட்ட ரீதியிலான சுதந்திரம் உள்ளது. பேச்சு சுதந்திரமும், மத ரீதியிலான சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது.
நாங்களும் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறோம். எங்கள் பிரச்சினைகளை இங்குள்ள கட்டமைப்புகள் மூலம் நாங்களே தீர்த்துக் கொள்கிறோம்.
எனவே எங்களுக்கு அல்கொய்தா இயக்கத்தின் ஆதரவு தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் கூறும்போது, அல்கொய்தா இயக்கம் தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்டது. அதன் ஆதரவு தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.