நாகாலாந்து: பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது போர்க்குற்றம்- இனப்படுகொலை- பாஜக குற்றச்சாட்டு
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது போர்க்குற்றம்- இனப்படுகொலை என்று நாகாலாந்து மாநில பாஜக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 13 பேரை ராணுவம் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் என சந்தேகித்து சுட்டுக் கொன்றது. இச்சம்பவத்தால் நாகாலாந்தில் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது.
மோன் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை முகாம் தீக்கிரையாக்கப்பட்டது. இன்று நாகாலாந்தில் பல்வேறு அமைப்புகள் பல மாவட்டங்களில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று: மாநிலங்களவையில் தாக்கலாகிறது செயற்கை முறை கருத்தரித்தல் மசோதா
சகிக்க முடியாது
இப்படுகொலை சம்பவம் தொடர்பாக நாகாலாந்து மாநில பாஜக தலைவரும் அமைச்சருமான Temjen Imma Along வெளியிட்ட அறிக்கை: ராணுவத்தால் பொதுமக்கள் 14 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. இத்தகைய படுகொலையை எந்த சூழ்நிலையிலும் சகித்துக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. தவறான உளவுத்துறை தகவலால் நிகழ்ந்தது என்கிற சாக்கு போக்கு சொல்லிவிட்டு எளிதாக ராணுவம் தப்பிவிட முடியாது.
ராணுவத்தினரை தண்டிக்க வேண்டும்
மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் சூழ்நிலையில் இப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் ராணுவம் மிகவும் எச்சரிக்கையாகவும் பொறுமையாகவும் இருந்திருக்க வேண்டும். இது போன்ற கொடூரமான குற்றங்களுக்குக் காரணமான அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
போர்க்குற்றம்- இனப்படுகொலை
அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. நிலக்கரி சுரங்கத்தில் நாள் முழுவதும் உழைத்துவிட்டு வீடு திரும்பிய தொழிலாளர்கள் நிராயுதபாணிகளாகத்தான் இருந்தனர். அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழ்நிலையில் அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்வது போர்க் குற்றம்; ஒரு இனப்படுகொலை. மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கோன்யாக் பழங்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார். நாங்கள் இந்த தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்யும் போது எங்கள் மண்ணின் மக்களை ஏன் சுட்டுக் கொல்கிறீர்கள்?
இது கறுப்பு நாள்
ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பொதுமக்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இன்றைய கறுப்பு நாளில் கடவுள் எங்களுடன் இணைந்து நிற்பாராக. இவ்வாறு Temjen Imma Along தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.