என்னது... தமிழக காங்கிரசுக்கு நக்மா அல்லது நஸ்ரியாதான் தலைவரா?
சென்னை: தமிழகத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் காங்கிரசை தாங்கி பிடிக்க, மாநில காங்கிரஸ் தலைவராக நடிகை நமீதா அல்லது சமீபத்தில் திருமணமான நடிகை நஸ்ரியா ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்கலாம் என்று கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் கூறியதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த பிறகு மாநில தலைவர் ஞானதேசிகனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வெடித்துள்ளன. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், வாசன், பீட்டர் அல்போன்ஸ் போன்றோர் இதற்கான போட்டியில் உள்ளனர்.
கருத்து கேட்ட முகுல் வாஸ்னிக்
இந்நிலையில், மேலிட தலைவர் முகுல் வாஸ்னிக் சமீபத்தில் சென்னை வந்திருந்து, காங்கிரசிலுள்ள பல கோஷ்டி நிர்வாகிகளிடமும் அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்டு திரும்பினார். மூத்த தலைவர்களிடமும் அவர் கருத்து கேட்டுள்ளார்.
சிதம்பரம் கருத்து
அப்போது சிதம்பரம் ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். அதாவது மிகவும் பிரபலமானவராகவும், சிறப்பாக பேசத்தெரிந்தவராகவும், எல்லோருக்கும் அறிமுகமானவராகவும் புதிய தலைவர் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஞானதேசிகனிடம் ஐடியா கேட்ட முகுல்
ஒருவகையில் இது சிதம்பரம் தன்னை பற்றியே மறைமுகமாக கூறிக்கொண்டதாக கூட இருக்கலாம். இதை கேட்டுக் கொண்ட முகுல் வாஸ்னிக், ஞானதேசிகனிடம் கலந்துரையாடும்போது, சிதம்பரம் கூறிய தகுதிகளை சொல்லி, அப்படிப்பட்ட பிரபலம் யாராவது உள்ளனரா என்று கேட்டுள்ளார்.
நக்மா அல்லது நஸ்ரியா
இதற்கு ஞானதேசிகன் சளைக்காமல், நடிகைகள் நக்மா அல்லது, நஸ்ரியாவை தமிழக காங்கிரஸ் தலைவராக்க வேண்டும். அவர்கள்தான் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள், சிறுபான்மையினர் ஓட்டுக்களும் கிடைக்கும் என்று கேலியாக கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பரவி அசைபோடப்பட்டு வருகிறது.