ஆதார் அட்டை குழு உள்பட மேலும் 4 அமைச்சரவை குழுக்களை கலைத்த பிரதமர் மோடி!
டெல்லி: ஆதார் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அமைச்சர்கள் குழு உட்பட 4 அமைச்சரவை குழுக்களை பிரதமர் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
நரேந்திரமோடி பிரதமரானதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு மத்திய அமைச்சர் குழுக்களை கலைத்து வருகிறார். அரசு நிர்வாகத்தில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்கவும் முடிவுகளை விரைவாக எடுத்து நிர்வாகத்தை துரிதப்படுத்தவும் இதுபோன்ற முடிவுகளை எடுத்து வருகிறார்.
இதன்முதல்கட்டமாக மன்மோகன்சிங் அரசு அமைத்திருந்த அதிகாரம் அளிக்கப்பட்ட 9 அமைச்சர் குழுக்கள், 21 அமைச்சர்கள் குழுக்கள் ஆகியவற்றை கடந்த மாதம் 31ம்தேதி கலைத்தார்.
இந்நிலையில் நேற்று மேலும் நான்கு அமைச்சர் குழுக்களை கலைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதார் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அமைச்சர்கள் குழு, விலைவாசி தொடர்பான அமைச்சர்கள் குழு, இயற்கை பேரழிவு மேலாண்மை குறித்த அமைச்சர்கள் குழு, உலக வர்த்தக அமப்பு தொடர்பான விஷயங்களை கவனித்துக்கொள்ளும் அமைச்சர்கள் குழு ஆகியவை கலைக்கப்படுகின்றன.
ஆதார் அட்டை வழங்குவது தொடர்பான விவகாரங்களில் முக்கிய முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவற்றை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கையாளும். விலைவாசி குறித்த செயல்பாடுகளை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவே கையாளும். இயற்கை பேரழிவு மேலாண்மை பிரச்சினைகளை அமைச்சரவை செயலாளர்கள் தலைமையிலான குழு இனிமேல் கவனிக்கும்.
உலக வர்த்தக அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கையாளும். தேவைப்பட்டால் இதுகுறித்து அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.