ஆங்கிலத்தில் உரையாற்ற விரும்பாத தலைவர்கள் பட்டியல்- பிரதமர் மோடியும் இடம்பிடித்தார்
டெல்லி: இந்தியில்தான் உரையாற்றுவேன் என்ற முடிவினால் பிரதமர் மோடியும் ஆங்கிலத்தில் உரையாற்ற விரும்பாத தலைவர்களின் பட்டியலில் இணைந்து விட்டார்.
உலக அளவில் பேசப்படும் ஒரு மொழிதான் ஆங்கிலம்.ஆனால், நம்முடைய புதிய பிரதமரான நரேந்திர மோடி, எங்கேயும் ஹிந்தியில் பேசுவதற்கே முடிவு செய்துள்ளார்.
ஆங்கிலம் மட்டுமே தெரிந்த உலகத் தலைவர்களின் முன்பும் அவர் இதைதான் கடைபிடிக்க உள்ளார்.
ஆங்கிலத் திறமை அதிகம்:
இதில் ஆச்சரியம் என்னவென்றால் மோடி அவர்கள் சிறந்த முறையில் ஆங்கிலத்தில் பேசும் திறமையுடையவர்.கடந்த வருடம் உலகளாவிய சந்திப்பு ஒன்றில் அவர் மிகத்தெளிவான உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கும் இடம்:
இதன்மூலம் ஆங்கிலத்தில் உரையாற்ற விரும்பாத தலைவர்களின் பட்டியலில் மோடியும் இடம் பெற்றுள்ளார்.
உச்சரிப்பு திறன் குறைவு:
பெரும்பாலும் சில நாட்டு தலைவர்கள் மிக அரிதாகத்தான் ஆங்கிலத்தில் பேசுகின்றனர்.காரணம் அவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த உச்சரிப்பு புலமை பெறாததுதான்.
தாய்மொழியில் பேசும் தலைவர்கள்:
சீனத்தலைவர் ஜி ஜின்பிங்க் பெரும்பாலும் தனது தாய் மொழியில்தான் பேசுகின்றார்.அவர் ஆங்கிலத்தில் புலமை பெறவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.மேலும், துருக்கி, ஜப்பான் தலைவர்களும் இதே காரணத்திற்காக ஆங்கிலத்தை தவிர்த்து வருகின்றனர்.
ஏஞ்சலா மெர்கெல் பேச்சு:
ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கெல் கூட மிக அரிதாகத்தான் ஆங்கிலத்தில் உரையாற்றுகின்றார்.ஆனால், இந்த வருடம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அவர் தெளிவான ஆங்கிலத்தில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கப்பட்ட மொழி:
இந்தி மொழி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.ஆனால், இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் மக்கள் உள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் பொதுவான தொடர்பு மொழி ஆங்கிலம்தான்.
5 சதவீதம் மட்டுமே:
அதிலும், 5 சதவீத மக்கள்தான் தெளிவான ஆங்கில உரையாடல் அறிவை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மோடியின் முடிவு எந்த அளவு நடைமுறையில் சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.