வாழ்த்திய மோடிக்கு நச் பதில்.. ஸ்டாலினுக்கு வாழ்த்து.. பாஜகவுக்கு குட்டு.. டுவிட்டரில் மமதா அதகளம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அமோக தேர்தல் வெற்றியை, பதிவு செய்துள்ள மமதா பானர்ஜி, பல்வேறு கட்சியினரின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.
அரசியலில் கடுமையாக மோதிக் கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியும், மமதா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் டுவிட்டர் வாயிலாக மமதா பானர்ஜிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க கலவரம்.. தேர்தல் ஆணையம்தான் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பு.. ஆளுநருக்கு மமதா சாட்டையடி பதில்
|
மோடி வாழ்த்து
இந்த வாழ்த்துக்களுக்கு ட்விட்டர் வழியாக மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துச் செய்தியில், மம்தா திதி, மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிக்காக நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மேற்குவங்க மாநில அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து முழு ஆதரவை அளிக்கும். கொரோனா தொற்று காலத்திலிருந்து மக்களை மீட்டு கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்திருந்தார்.
|
உறவில் புதிய மைல் கல்
இதை ரீட்வீட் செய்துள்ள மம்தா பானர்ஜி, தேங்க்யூ நரேந்திர மோடி அவர்களே, உங்களது வாழ்த்துக்களுக்கு. மேற்கு வங்க மாநில நலனை மனதில் வைத்து மத்திய அரசின் தொடர் ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன். எனது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி இந்த பெருந்தொற்று சவாலில் இருந்து நாம் இணைந்து வெளியில் வருவதற்கு உதவ வேண்டும். மேலும், நம் ஒத்துழைப்பால், மத்திய மாநில அரசுகள் உறவில் புதிய மைல் கல் எட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சக்கர நாற்காலி
முன்பாக , மம்தா பானர்ஜியை, நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மம்தா பானர்ஜி காலில் அடிபட்ட நிலையில் பாஜகவினர் தன்னை தாக்கியதாக கூறி அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரச்சாரம் செய்தார். இந்தநிலையில்தான் நமது ஒத்துழைப்பு புதிய மைல் கல் என்ற அளவில் இருக்கும் என மமதா பானர்ஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
ஒடிசா முதல்வர்
தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், 3 முறை தொடர்ந்து நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் . உங்களது தலைமையின்கீழ் மேற்கு வங்க மாநிலம் புதிய உயரத்தைத் தொடும் என்ற நம்பிக்கை உள்ளது எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மமதா பானர்ஜி, மேற்கு வங்க மாநில மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு அனைத்தையும் செய்வேன். மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துவேன், என்று தெரிவித்துள்ளார்.
|
சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், மமதா பானர்ஜி உடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் . இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மக்கள், வளர்ச்சிக்காக ஓட்டுப் போட்டுள்ளனர். மக்களை பிரித்தாளக்கூடிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். எனது, மக்களின் சார்பாக மற்றும் எனது கட்சி தொண்டர்கள் சார்பாக அகிலேஷ் யாதவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
|
நாட்டிலிருந்தே விரட்டப்படுவார்கள்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் பாஜகவை வீழ்த்தியதற்காக மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்க மாநில மக்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா, உங்களுக்கு, இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பிற பகுதி மக்களுக்கு மேற்கு வங்க மாநில மக்கள் வழிகாட்டியுள்ளனர். பாஜகவின் பிரித்தாளும் வெறுப்பு அரசியல், ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் விரட்டப்படும் நாள் விரைவில் வரும், என்று தெரிவித்துள்ளார்.
|
தேர்தல் ஆணையம்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பாஜக மற்றும் அதன் சார்புடைய தேர்தல் ஆணையம் அனைத்து விஷயங்களையும் உங்கள் மீது வீசி எறிந்து பார்த்தது. சமையலறை சிங் உட்பட இதில் அடக்கம். ஆனால் அத்தனையையும் மீறி நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பான ஆட்சி கொடுக்க, உங்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி, பிரித்தாளும் அரசியலை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே மேற்கு வங்க மாநில மக்கள் வைத்துள்ளனர். அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவை மேற்கு வங்கத்தில் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
|
ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மறுபடியும் மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில் மக்களின் பாதுகாப்பை மம்தா பானர்ஜி உறுதி செய்வார் . மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் செழுமையை பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன். திமுக சார்பில் மம்தா பானர்ஜிக்கு மற்றொரு சிறப்பான ஆட்சி காலம் அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
தமிழகம் புதிய உயரங்கள்
இதற்கு பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி, உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி. மேலும், உங்களது வெற்றிக்காக எனது, இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம், புதிய உயரங்களை, உங்களது தலைமையில் தொடும், வளர்ச்சியை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, என்று தெரிவித்துள்ளார்.
|
லாலு பிரசாத்
லாலு பிரசாத் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், அனைத்து தடைகளையும் மீறி வரலாற்று வெற்றி பெற்றுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது ஆரோக்கியம், தொடர்பாக எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். முழுமனதாக வாக்களித்த, மேற்குவங்க மாநில மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். பிரித்தாளும் பாஜகவின் கொள்கைகளுக்கு நீங்கள் சிக்கிக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாட்டை காப்பாற்ற ஓட்டு
இதற்கு பதில் அளித்துள்ளார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மாநிலம் இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக ஓட்டு போட்டுள்ளது. மேற்கு வங்க மாநில மக்களின் சார்பாக, லாலு பிரசாத் யாதவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது ஆரோக்கியத்திற்காக நான் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதேபோல, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்துக்கு, மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்ததோடு, உங்களது தொடர் ஆதரவு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.