டீ விற்றபோது கிடைத்த அவமானங்கள்தான் எத்தனை... டீக்கடையிலிருந்து மோடி!
அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள டீக்கடையிலிருந்தபடி நேற்று நூதன முறையில் மக்களுடன் கலந்துரையாடிய மோடி, டீக்கடைகள்தான் நாட்டின் நாடாளுமன்றம் என்று விவரித்தார். மேலும், இப்போது டீக்கடையில் இருப்பது எனக்கு பழைய நினைவுகளை நினைவுபடுத்துகிறது என்றும் பழைய நினைவுகளில் மூழ்கினார்.
டீ விற்றவர் என்று மோடிைய காங்கிரஸார் கிண்டலடித்து வரும் நிலையில் அதையே ஒரு பிரசார உத்தியாக மாற்றி விட்டது பாஜக . நாடு முழுவதும் மோடி பெயரிலேயே நமோ டீஸ்டால் என்றும் கடைகளைப் போட ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் நேற்று அகமதாபாத்தில், மோடி அதிரடியாக ஒரு டீக்கடையில் அமர்ந்தபடி நாட்டு மக்களிடையே கலந்துரையாடினார். அப்போது பல விஷயங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.
அவரது பேச்சிலிருந்து....
தேநீருக்கு நன்றி
சாதாராண மக்கள் நினைப்பதைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள டீக்கடைகள்தான் சரியான வழி. இது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. மக்களை எளிதில் அணுகக் கூடிய வாய்ப்பு இது. இதற்காக தேநீருக்கு நன்றி சொல்கிறேன்.
பழைய நினைவுகள் வருகின்றன
எனக்குள் பழைய நினைவுகள் வருகின்றன. நான் டீ விற்றபோது சந்தித்த அனுபவங்கள் நினைக்கு வருகின்றன. மக்களை சந்தித்து நான் அறிந்து கொண்டது ஏராளம்.
எத்தனை அனுபவங்கள்.. அவமானங்கள்
நான் டீ விற்ற நாட்களில் நான் சந்தித்த அனுபவங்களும் அதிகம், அவமானங்களும் அதிகம்.
இதுதான் உண்மையான நாடாளுமன்றம்
உண்மையில் டீக்கடைகள்தான் நாட்டின் நாடாளுமன்றம் ஆகும். இங்குதான் மக்களை நாம் அறிய முடியும், மக்கள் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
உண்மையான நல்லாட்சி எது
உண்மையான நல்லாட்சி எது என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த வார்த்தையை மட்டும் சொல்கிறார்கள். ஆனால் அதன் முழுப் பயனையும் நாம் யாரும் இதுவரை உணரவில்லை.
சர்க்கரை நோய் போல
மோசமான ஆட்சி என்று சொல்வதை சர்க்கரை நோய்க்கு ஒப்புமைப்படுத்தலாம். சர்க்கரை நோய் வந்தால் எப்படி ஆகுமோ, அப்படித்தான் மோசமான ஆட்சியும். ஊழல், வளர்ச்சியின்மை ஆகியவற்றை அது கொண்டு வந்து விடும்.
அரசு மீது நம்பிக்கை இல்லை
மத்திய அரசு மீது சாதாரண மக்கள் புகார்களைக் கூறுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு அரசு மீதான நம்பிக்கை போய் விட்டது. அதை நாம் நிலை நிறுத்தியாக வேண்டும்.
2 கோடி பேருடன் பேசப் போகிறேன்
தொழில்நுட்பம் மூலம் இன்று நாடு முழுவதும் மக்களுடன் நான் டீ சாப்பிட்டபடி உரையாட முடிந்திருக்கிறது. இனிமேல் இதேபோல வீடியோ கான்பரன்சிங் மூலம் 2 கோடிப் பேருடன் பேசப் போகிறேன் என்றார் மோடி.
கேள்விக்கு என்ன பதில்
தொடர்ந்து பல்வேறு ஊர்களிலிருந்து கேள்விகள் கேட்டவர்களுக்கு மோடி பதிலும் அளித்தார்.
அமெரிக்கா விசா மறுப்பு
அமெரிக்கா செல்வதற்கான விசா தொடர்ந்து உங்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆனால் இப்போது அவர்களின் நிலையில் மாற்றம் தெரிகிறது. இதுகுறித்து சொல்லுங்கள் என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் கேட்டார். அதற்கு மோடி, அமெரிக்காவிற்கான இந்திய தூதருடன் பேசிய பின்பு தான், அவர்கள் என்ன காரணத்திற்காக மறுப்பு தெரிவித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இருந்தாலும், இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது என்றார்.
செமையாக யூஸ் செய்த தமிழக பாஜகவினர்
மோடியின் இந்த டீக்கடை பிரசாரத்தை தமிழக பாஜகவினர் நல்ல முறையில் பயன்படுத்தினர்.
பெரிய சைஸ் டிவி
திண்டுக்கலில் உள்ள ஒரு இடத்தில் பெரிய சைஸ் டிவியை வைத்து பலரும் பார்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னை டீக்கடைகளில்
இதேபோல சென்னை தலைமைச் செயலகம் அருகே ஒரு டீக்கடை, அண்ணா சாலை, மேடவாக்கம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகளிலும் மோடி பேச்சு டிவி மூலம் காட்டப்பட்டது.
மதுரவாயல் டீக்கடையில் தமிழிசை...
மதுரவாயலில் நடந்த டீக்கடை நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். அவர் மக்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து மோடி பேச்சைக் கேட்க ஏற்பாடு செய்தார். பலரும் டீ வாங்கிக் குடித்தபடி மோடி பேச்சைக் கேட்டனர்.
மொத்தத்தில் நேற்று நாட்டின் பல்வேறு டீக்கடை பெஞ்சுகளும் மோடி பேச்சால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன என்று சொன்னால் மிகையில்லை.
இதேபோல மேலும் 15 பேச்சுக்கள்
இந்த நிகழ்ச்சி பெரும் ஹிட்டாகி விட்டதால் வரும் லோக்சபா தேர்தலுக்குள் 12 முதல் 15 முறை இதேபோன்ற நிகழ்ச்சியை நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.