ஹெலிகாப்டரில் சிக்கிக் கொண்ட ரெட் கார்பெட் - மயிரிழையில் தப்பிய அமைச்சர் நிதின் கட்காரி
ஹால்டியா: மேற்கு வங்காளத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அதன் இறக்கையில் சிவப்பு கம்பள தரை விரிப்பு சிக்கிக்கொண்ட சம்பவத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹால்டியா நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.
அவருடைய ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு அருகே சிவப்பு கம்பளம் மற்றும் தார்ப்பாய் போன்றவை விரிக்கப்பட்டிருந்தன. அந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டரை விமானி தரையிறக்க முயன்றார்.
அப்போது திடீரென்று எழுந்த பலத்த காற்று காரணமாக அங்கு போடப்பட்டிருந்த தரை விரிப்புகள் பறந்தன. இதில் சில விரிப்புகள், அங்கே தரையிறங்கிக்கொண்டு இருந்த ஹெலிகாப்டரின் இறக்கையில் சுற்றிக்கொண்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் எந்த வித பிரச்சினையும் இன்றி ஹெலிகாப்டரை விமானி பத்திரமாக தரையிறக்கினார். இதனால் நிதின் கட்காரி மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து டுவிட்டர் தளத்தில் கூறியுள்ள நிதின் கட்காரி, "மேற்கு வங்கத்தில் தரையிறங்கிய போது எனது ஹெலிகாப்டரின் இறக்கையில் தரை விரிப்பு சிக்கிக்கொண்டது. எனினும் அங்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. நான் பத்திரமாக தரையிறங்கினேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஹால்டியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஹெலிகாப்டர் தரையிறங்கும் பகுதிக்கு அருகே தரைவிரிப்புகளோ, கொடிகளோ இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.