'இதுதான் கடைசி சான்ஸ்.. இதைவிட்ட அவ்வளவுதான்..' சோனியா காந்திக்கு நவ்ஜோத் சித்து எழுதிய பரபர கடிதம்
சண்டிகர்: அடுத்தாண்டு பஞ்சாப் தேர்தலுக்கு முன்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ள பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாபில் காங்கிரஸை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுவே கடைசி வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியுள்ள பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நீட்டித்து வந்த குழப்பங்கள் இப்போது தான் மெல்லச் சீராகத் தொடங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக நவ்ஜோத் சிங் சித்து காய்களை நகர்த்தத் தொடங்கினார்.
மேலும், சுமார் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று சோனியா கந்திக்கு கடிதம் எழுதியதால், முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
என் மூச்சு உள்ள போதே கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும்.. நா தழுத்து கலங்கிய ராமதாஸ்
பஞ்சாப் குழப்பம்
இதனால் கோபமடைந்த அமரீந்தர் சிங், காங்கிரஸ் தலைமை தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும் தனது உழைப்பை புறம் தள்ளிவிட்டதாகவும் வெளிப்படையாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், அவர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தலாவதாக அறிவித்தார். இது பஞ்சாப் சிக்கலை மேலும் மோசமாக்கியது. இருப்பினும், அமீர்ந்தர் சிங்கும் பாஜகவில் இணையவில்லை, நவ்ஜோத் சிங் சித்துவும் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
நவ்ஜோத் சித்து கடிதம்
இந்தச் சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்கிய சிக்கல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். 2017 சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
13 அம்ச திட்டம்
சித்து தனது கடிதத்தில் போதைப்பொருள் விவகாரம், சட்டம், விவசாயம், மின்சாரம், பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் நலன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 13 அம்ச திட்டத்தைத் தயாராக வைத்திருப்பதாகவும் இது குறித்து சோனியா காந்தியிடம் நேரில் விளக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடைசி வாய்ப்பு
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் உயிர்ப்புடன் வைக்கும் கடைசி வாய்ப்பு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அந்த கடிதத்தில், "நாட்டின் பணக்கார மாநிலமாக இருந்த பஞ்சாப் இப்போது அதிக கடன்பட்டிருக்கிறது. போதைப்பொருள், விவசாயப் பிரச்சினைகள், வேலை வாய்ப்புகள், மணல் எடுப்பு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலன், மின்சாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் உடனடியாக தீர்க்க வேண்டும்" என்று அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மீண்டும் யுத்தம்
மேலும், இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கப் பஞ்சாப் மாநில அரசுக்குச் சோனியா காந்தி வழிகாட்ட வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அமரீந்தர் சிங்கிற்கு பிறகு, பஞ்சாப் முதல்வர் பதவி தனக்கு வரும் என்று சித்து பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இருப்பினும், சரண்ஜித் சிங்கிற்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதால் சித்து அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் மாநில பிரச்சினைகளைச் சரி செய்ய சரண்ஜித் சிங் அரசுக்குச் சோனியா காந்தி வழிகாட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதலை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.