நேபாள நிவாரண நிதியை யாரும் மிஸ் யூஸ் பண்ணாதீங்க.. மனீஷா கொய்ராலா எச்சரிக்கை
மும்பை: நேபாள நிலநடுக்கத்தை வைத்து சிலர் தானமாக பெறப்படும் பணத்தில் மோசடி செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் தன்னை வருத்தமடைய வைத்துள்ளதாக நடிகை மனீஷா கொய்ராலா கூறியுள்ளார்.
மனீஷா நேபாளத்தைச் சேர்ந்தவர். தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் மனீஷா நடித்துள்ளார். தமிழ் படங்கள் மட்டுமின்றி மனீஷா இந்திப்படங்களிலும் நடித்து வருகிறார்.
நேபாள நிலநடுக்கம் தொடர்பாக இந்தியா செய்து வரும் உதவியால் நெகிழ்ந்து போயுள்ளதாக ஏற்கனவே மனீஷா கூறியிருந்தார். இந்த நிலையில் இதை வைத்து சிலர் மோசடியில் இறங்கியிருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் எழுதியுள்ளதாவது...
எச்சரிக்கை...
பல நிறுவனங்கள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மோசடி செய்யலாம் என்று என்னை பலர் எச்சரித்துள்ளனர். எனக்கும் இதே கவலைதான் உள்ளது. எனவே நேபாள நிலநடுக்கத்திற்கு பண உதவி உள்ளிட்டவற்றை செய்வோர், தாங்கள் வழங்கும் நபர், நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து சோதித்துக் கொண்ட பின்னர் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களின் உதவி...
இதுபோன்ற நிறுவனங்களிடம் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகும். என்னுடைய நண்பர்கள் பலர் காத்மாண்டு போய் மக்களுக்கு உதவ விரும்புகிறார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே ஏராளமான பேர் உள்ளனர்.
இருந்த இடத்திலிருந்தே...
குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல அவதியுறுகின்றனர். எனவே அங்கு போய் நிவாரண உதவிகளைச் செய்வதை விட இருந்த இடத்திலிருந்தே நேபாள மக்களுக்குத் தேவையானதைச் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருடம் உதவிடுங்கள்...
பாதிக்கப்பட்டோருக்கு நம்மால் எந்த அளவுக்கு அதிகமாக உதவ முடியுமோ அதைச் செய்ய முன்வருமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிரேன். எனது சகோதரர் நேபாளத்தில் நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு் தேவையானதைச் செய்ய உதவி வருகிறார்' என்று கூறியுள்ளார் மனீஷா.