அருணாச்சலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பேமா கண்டு... ஆளுநர் மவுனத்தால் தொடரும் குழப்பம்
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் பேமா கண்டு உரிமை கோரியும் ஆளுநர் பதிலளிக்காததால் அக்கு குழப்பம் நீடிக்கிறது.
அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்க்கப்பட்டது செல்லாது என்றும், முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கலிக்கோ புல் ஆட்சி விலக்கப்பட்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
அம்மாநில முதல்வராக நபம் துகி பதவியேற்றார். ஆனால், நபம் துகி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனக்கு இருக்கும் பெரும்பான்மையை இன்று நிரூபித்து காட்ட வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் பொறுப்பை கவனித்து வரும் திரிபுரா ஆளுநர் ததாகதா ராய் உத்தரவிட்டார்.
ஆளுநருடன் மோதல்
இதை ஏற்க நபம்துகி மறுத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தது 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார். சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து தனது முடிவை தெரிவிப்பதாக ஆளுநர் கூறியிருந்தார். ஆனால், வாக்கெடுப்பை ஒத்தி வைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய அவர் இன்று வாக்கெடுப்பை நடத்தும்படி கூறி நபம் துகியின் கோரிக்கையை நிராகரித்தார். இருப்பினும் இந்த குறுகிய காலத்திற்குள் சட்டசபையைக் கூட்டுவது சாத்தியம் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்தார்.
நபம் துகிக்கு ஆதரவு இல்லை
பெரும்பான்மையை நிரூபிக்க 30 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், நபம் துகி தலைமையிலான காங்கிரசில் 15 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். இதனால் நபம் துகி ஆட்சியை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டது.
புதிய திருப்பம்
இந்த நிலையில் புதிய திருப்பமக அருணாச்சல் பிரதேச சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் பதவியில் இருந்து நபம் துகி ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக பேமா கண்டு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.வும் பாஜகவுடன் கை கோர்த்து ஆட்சி அமைத்தவருமான கலிக்கோ பவுலும் கலந்து கொண்டார்.
வெல்வாரா பேமா கண்டு?
நபம் துகிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களில் முக்கியமானவர்கள் பேமா கண்டு, கலிக்கோ பவுல் தற்போது நபம் துகி ராஜினாமா செய்துள்ளதால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பேமா கண்டுவை ஆதரிக்கின்றனர். இதனால் காங்கிரஸ் ஆட்சியில் நீடிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஆளுநர் மவுனத்தால் குழப்பம்
இதனிடையே பேமா கண்டு, நபம் துகி, கலிக்கோ பவுல் உள்ளிட்டோர் ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். தமக்கு 2 சுயேட்சைகள் உட்பட 47 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது; பெரும்பான்மைக்கு 30 எம்.எல்.ஏக்கள் போதுமானது எனவும் விளக்கம் அளித்திருந்தார் பேமா கண்டு.
ஆனாலும் ஆளுநர் எந்த பதிலையும் அளிக்காததால் அம்மாநிலத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
ஆகையால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பீமா கண்டு தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.