பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர்... கூட்டாக அணிசேரும் எதிர்க்கட்சிகள்!
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதா அல்லது பொதுவேட்பாளரா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் 22ம் தேதி முடிவு செய்ய உள்ளது.
டெல்லி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் 22ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பாஜக அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதா அல்லது பொதுவேட்பாளரை அறிவிப்பதா என்பது முடிவாகும்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது.
ஆதரவு திரட்டிய மோடி
தாங்கள் அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழக முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட மாநில முதல்வர்களிடம் கேட்டு கொண்டள்ளார். இதே போன்று எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு ஆதரவு அளிக்க பாஜக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள் வியூகம்
ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான 10 பேர் கொண்ட குழுவையும் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது.
ஆலோசனைக் கூட்டம்
பாஜக வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் வரும் 22ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக, திருணாமுல் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன.
முடிவு
இந்தக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா என்று முடிவெடுக்கப்படும். பாஜக 23ம் தேதி ஜனாதிபதி வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கும் முடிவில்தான் அனைவரும் ஏற்கும் ஒரே வேட்பாளரா அல்லது போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்பது தெரியவரும்.