17 குழந்தைகள், பெண்களை கொன்ற... சுரேந்தர் கோலியின் தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைப்பு
அலகாபாத்: நொய்டாவில் பல்வேறு இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்த குற்றவாளி சுரேந்தர் கோலியின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டுள்ளது.
டெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் பல்வேறு இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அடிக்கடி காணாமல் போனவண்ணம் இருந்தனர். இதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், காணாமல் போன போயல் என்ற பெண்ணின் தந்தை உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, கடந்த 2006ஆம் ஆண்டு சி.பி.ஐ. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், சுமார் ஒன்றரை வருடங்களாக இயங்காத செல்போன் நம்பர் ஒன்று திடீரென இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த எண்ணைப் பயன்படுத்திய, சுரேந்தர் கோலி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், பாயலை கொன்று தனது பங்களாவில் புதைத்ததை சுரேந்தர் கோலி ஒப்புக் கொண்டார்.
சுரேந்தர் பாயலைப் புதைத்தாகக் காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்த போலீசார், அங்கு ஏராளமான மண்டை ஓடுகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல், சுரேந்தரின் பங்களா காம்பவுண்ட் சுவருக்குப் பின்னால் இருந்த காலி நிலத்திலுள்ள சாக்கடை கால்வாயில் கொலை செய்யப்பட்டவர்களின் துணிகள், செருப்பு மற்றும் குழந்தைகளின் ஸ்கூல் பேக் போன்றவற்றையும் போலீசார் மீட்டனர்.
இதையடுத்து, சுரேந்தருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது முதலாளி மொனிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டார். இருவரும் சேர்ந்து 17 இளம்பெண் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து வெட்டிக் கொன்று சாக்கடையில் வீசியதாக 16 வழக்குகள் பதிவானது. பிறகு இதில், பாந்தருக்கு நேரடி தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வேறு சில வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார்.
இதையடுத்து, மொனிந்தர் சிங்குக்கு தெரியாமல், ஏராளமான இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கொலை செய்ததாக சுரேந்தர் கோலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காசியாபாத் சி.பி.ஐ. நீதிமன்றம், கடந்த 2009ம் ஆண்டு சுரேந்தருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், கோலியின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் செய்த பரிந்தரையை கடந்த ஜூலை 27-ல் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, கோலியை தூக்கிலிடுவதற்கான வாரண்ட்டை உபியின் மீரட் மாவட்ட சிறைக்கு காசியாபாத் நீதிமன்றம் பிறப்பித்தது.
தூக்கை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சுரேந்தர் கோலி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூடு, நீதிபதி பி.கே.எஸ்.பாகெல் அடங்கிய பெஞ்ச் கோலியின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.