ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் வந்த நிதின் கட்கரி... சர்ச்சையை கிளப்பும் காங்கிரஸ்
நாக்பூர்: சாதாரண பொதுஜனம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் போனால் அபராதம் போடுகின்றனர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள். ஆனால் மத்திய போக்குவரத்துறை அமைச்சரே ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் போய் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோகன் பகவத்தைச் சந்திக்க தனது வெள்ளை ஸ்கூட்டரில் வந்த மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி விதிமுறைகளுக்குப் புறம்பாக ஹெல்மெட் அணியாமல் வந்தது டிவி காமிராக்களில் பதிவானது.
இது குறித்து அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்கள் சாலை விதிமுறைகளை போக்குவரத்து அமைச்சரே மீறியுள்ளது பற்றி சுட்டிக்காட்டியதற்கு அவர் பதில் எதுவும் கூறாமல் அலுவலகம் உள்ளே சென்றார்.
டிவி சானல்களும் இதனை ஒளிபரப்ப நிதின் கட்கரி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் கூறும்போது, "இது அந்தக் கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் அணுகுமுறையை அறிவுறுத்துகிறது" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் சாடினார்.
ஏற்கனவே கடந்த டிசம்பரில் நிதின் கட்கரி ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றதை டிவி சானல் ஒன்று காண்பித்தது. ஆனால் அப்போது அவர் மத்திய அமைச்சராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.