காந்தி ஒன்றும் கடவுள் அல்ல.. பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பேச்சு
மகாத்மா காந்தி ஒன்றும் கடவுள் இல்லை. அவரும் மனிதன்தான் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா: மகாத்மா காந்தி கடவுள் அல்ல, அவர் மனிதன்தான். எனவே அவரை கடவுளாக போற்றுவதற்கு பதிலாக அவரது கொள்கைகளை பின்பற்றுங்கள் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் சம்ப்ரான் மாவட்டத்தில் மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும். அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழா தற்போது பீகார் முழுவதும் மாநிலக் கல்வித்துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாட்னாவின் 'ஞான் பவன்' அலுவலகத்தில் உள்ள சாம்ராட் அசோகா மையத்தில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 800 மாணவர்களுக்கு மேல் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டு, காந்தியின் வாழ்க்கை நிகழ்வுகளை கதையாக சொல்லும் நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், அகிம்சையை கொண்டே காந்தி தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். எனினும் அகிம்சை போதித்தவர் கொல்லப்பட்டது முரண்பாடானது. காந்தி கொல்லப்பட்டது உண்மைதான்.
ஆனால் அவரது கொள்கைகள், சித்தாந்தங்களை அழிக்கமுடியாது. உலகம் முழுவதும் அவரது கொள்கைகள் பரந்து விரிந்துள்ளன. காந்தி கூறியது போல் உழைப்பின்றி சொத்துகளை குவிப்பது நல்லதல்ல.
காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது. அவர் ஒரு மனிதர். அவர் காட்டிய வழியைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர வெறுமனே சிலைகளை அமைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றார் நிதிஷ்குமார்.












Click it and Unblock the Notifications