மிஸ்டர் மோடிஜி... ஓ.பி.சி. தெரியும் அதென்னங்க புதுசா ஈ.பி.சி? நிதிஷ்குமார் கிண்டல்
பாட்னா: பீகார் தேர்தல் பிரசாரத்தில் தம்மை மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என பிரதமர் நரேந்திர மோடி பேசி வருவதற்கு முதல்வர் நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் நிதிஷ்குமார் கூறியதாவது:
நமது நாட்டில் ஒருவர் மதம் மாற முடியும்.. ஆனால் ஒருவரது ஜாதி என்பது ஒரே ஜாதியாகத்தான் இருக்கும்.
ஆனால் நமது பிரதமர் மோடியோ இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து மிக மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவுக்கு மாறி இருக்கிறார். பீகாரில் மிக மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு இருக்கிறதா?
இதற்கு முன்னர் பிரதமர் மோடியை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு பிரதமராக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவித்திருந்தார். தற்போது மோடியை அதில் இருந்து விலகி மிக மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்கிறார்.
இந்த நாட்டில் எந்த ஒரு பிரதமரும் ஜாதிய முத்திரை குறித்து இவ்வளவு பிரச்சனையாக்கியதில்லை. இதன் மூலம் தன்னுடைய வளர்ச்சி என்ற இலக்கில் இருந்து பிரதமர் மோடி விலகி நிற்பது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.