வங்கிக் கடன்களுக்கான வட்டியில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டெல்லி: ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இன்று அறிவித்தார்.
2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.5 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்தன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று ராஜனிடம் நிதி அமைச்சர் ஜெட்லி வலியுறுத்தி வரும் நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்றால் போல் வட்டி விகிதம் குறைக்கப்பட மாட்டாது என்று ராஜன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், குறுகிய காலக் கடன்களுக்கான தற்போதைய வட்டி விகிதமே தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைய தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜனின் அறிவிப்பு வெளியானதையடுத்து பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றம் தேசிய பங்குச்சந்தை நிப்டி ஆகியவை 0.50 சதவிகிதம் குறைந்தது.
இந்த அறிவிப்பால் வீடு, வாகனக் கடன் வாங்கியோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.