ஏமாத்தீட்டாங்க சார்! மதுபானத்துல தண்ணீய கலந்து விற்கிறாங்க! ‛குடிமகன்’ புகார் மீது விசாரிக்க உத்தரவு
உஜ்ஜயினி: மத்திய பிரதேசத்தில் கட்டண வாகன நிறுத்தகம் நடத்தும் நபர் நாட்டு மதுவில் போதை ஏறவில்லை என அளித்த புகார் பற்றி விசாரணைக்கு கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மதுபானத்தில் தண்ணீய கலந்து விற்பனை செய்வது கவலையாக உள்ளது எனக்கூறி நுகர்வோர் நீதிமன்றத்தையும் நாட உள்ளதாக அந்தநபர் கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள பகதூர் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் சோதியா (வயது 42). இவர் வாகன நிறுத்தகம் நடத்தி வருகிறார்.
இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி நண்பருடன் சேர்ந்து மதுபானம் குடித்து வருவதாக கூறப்படுகிறது.
உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
போதை ஏறவில்லை
இந்நிலையில் ஏப்ரல் 12ம் தேதி லோகேஷ் சோதியா கடை ஒன்றில் நாட்டு மதுப்பாட்டில்கள் 4 வாங்கினார். பிறகு அவர் தனது நண்பருடன் சேர்ந்து 2 மதுப்பாட்டில்களை குடித்து காலி செய்தனர். இருப்பினும் லோகேஷ் சோதியாவுக்கு போதை ஏறவில்லை. இதனால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. அதாவது மதுபானத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக அவர் நினைத்தார்.
புகாரளிக்க முடிவு
இதுபற்றி அவர் புகாரளித்து மது பிரியர்களை ஏமாற்றுவோர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்பினார். இந்த விசாரணையின்போது சரியான ஆதாரங்களை வழங்க வேண்டும் என நினைத்தார். இதனால் தன்னிடம் உள்ள மீதமுள்ள 2 பாட்டில்களையும் அவர் திறக்கவே இல்லை.
விசாரணைக்கு உத்தரவு
இதுதொடர்பாக அவர் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மற்றும் கலால்துறை கமிஷனர் இந்தர் சிங் தாமோர் ஆகியோரிடம் புகாரளித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிக்க கலால்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றிய விசாரணை அறிக்கை வந்தபிறகு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் நீதிமன்றத்திலும்...
இதுபற்றி லோகேஷ் சோதியா கூறுகையில், ‛‛பாட்டிலில் மதுவுக்கு பதில் தண்ணீர் அடைத்து ஏமாற்றுகின்றனர். இதனால் எனக்கு போதை ஏறவில்லை. உணவு, எண்ணெயில் கலப்படம் செய்பவர்கள் தற்போது மதுவிலும் கலப்படம் செய்கிறார்கள். இது மிகவும் கவலையளிக்கிறது. இதுதொடர்பாக புகார் அளித்து நுகர்வோர் நீதிமன்றத்தை நாட உள்ளேன்'' என்றார். இதற்கிடையே லோகேஷ் சோதியாவின் வழக்கறிஞர் நரேந்திர சிங் தாக்டே கூறுகையில், ‛‛லோகேஷ் சோதியா பல ஆண்டுகளாக மதுபானம் அருந்துகிறார். இதனால் மதுபானத்தின் சுவை, தரம் பற்றி அவருக்கு நன்கு தெரியும். இதுதொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்'' என்றார்.