ராஜிவ் வழக்கு: 7 தமிழருக்கு மேலும் கருணை காட்ட தேவை இல்லை- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 தமிழருக்கு மேலும் கருணை காட்ட தேவை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பாரதிய ஜனதா அரசு வாதிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற உள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் தண்டனை குறைப்பு செய்து, விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி அறிவித்தது.

இதை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 தமிழரின் விடுதலைக்கு தடை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி உத்தரவிட்டது.
இப்போது அந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 15-ந் தேதி நடந்த விசாரணையின்போது, 7 பேரின் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என நீதிபதிகள் அறிவித்து, அடுத்தகட்ட விசாரணை 21-ந் தேதி நடைபெறும் என அறிவித்தனர்.
இதன்படி, நேற்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின் தொடக்கத்தில், நீதிபதிகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ரிட் மனு விசாரணைக்கு தகுதியானதா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.
விடுதலை செய்யலாம்
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆகியோர், மத்திய அரசின் மனு எந்த வகையிலும் விசாரணைக்கு தகுதியானது அல்ல என்று வாதிட்டனர்.
இதற்கு நீதிபதிகள், மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள், அவற்றின் தகுதியின் அடிப்படையில் விசாரிக்கப்படும் என்று கூறினர்.
அதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதிட்டதாவது:
- வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதால் மத்திய அரசின் அடிப்படை உரிமை எதுவும் பாதிக்கப்படவில்லை.
- தற்போது விசாரணையில் உள்ள ரிட் மனுவின் மீதுதான் அவர்களை விடுதலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்ப்பில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதாக கூறப்படும் அம்சங்கள் மற்றும் கேள்விகளுக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
- தற்போதைய விசாரணையானது அவர்களுடைய விடுதலை தொடர்பானதாக இருப்பதுதான் சரியாக இருக்கும். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே 24 ஆண்டுகளை சிறையில் கழித்து இருக்கிறார்கள் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டிய நேரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம் 31 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்கள். இதை மேலும் நீடிப்பது எந்த வகையிலும் நியாயம் அற்றது.
இவ்வாறு ஜெத்மலானி வாதிட்டார்.
ஆயுள் என்பது என்ன?
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, அரசியல் சாசன பெஞ்ச் முன்பு வைக்கப்பட்டுள்ள கேள்விகளில் ஒன்று, ஆயுள் தண்டனை என்பது சில வழக்குகளில் ஏற்கனவே தீர்மானித்து உள்ளபடி 14 ஆண்டுகளா, 20 ஆண்டுகளா அல்லது 25 ஆண்டுகளா அல்லது ஆயுள் முழுவதற்குமா என்பதை அதன் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
மத்திய அரசு வாதம்:
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதிட்டதாவது:
- மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனு, ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
- கருணை மனுவை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி இந்த நீதிமன்றம் அவர்களுடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. எனவே இவர்களுக்கு ஏற்கனவே கருணை காட்டப்பட்டுள்ளது.
- இந்த சம்பவத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தவிர மேலும் 18 அப்பாவிகள் கொல்லப்பட்டு, 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
- இது கொடூரமாக ஏற்கனவே திட்டமிட்டும் நன்கு தெரிந்தும் செய்த சதிச்செயல். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவத்துக்கு காரணமான இவர்கள் இதற்கு மேல் எந்த வகையான கருணைக்கும், இரக்கத்துக்கும் தகுதியற்றவர்கள்.
- இவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு சட்ட ரீதியாக எந்த அதிகாரமும் கிடையாது. இந்த வழக்கில் இவர்களை விடுவிப்பதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
இந்த 7 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்து விடுதலை செய்வதற்கு எடுத்த தமிழக அரசின் முடிவில் பாரபட்சம் உள்ளது.
- கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி 19-ந் தேதி, மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய கடிதத்துக்கு எதிராக மனுவை தாக்கல் செய்ய அனைத்து அதிகாரமும் மத்திய அரசுக்கு உள்ளது. தனக்கு உரிமையும், அதிகாரமும் இல்லாத விஷயங்களில் மாநில அரசு தலையிட முடியாது.
- இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுவது முற்றிலும் தவறானது.
இவ்வாறு மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வழக்கின் மீதான வாதங்கள் இன்றும் தொடரும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications