நோ மணி, நோ பிரியாணி: பெங்களூரில் நம்பிக்கையோடு வாக்கு கேட்கும் தமிழச்சி
பெங்களூர்: உங்களுக்கு கொடுக்க பணமும் இல்லை, பிரியாணி வாங்கிக் கொடுக்க காசும் இல்லை, நல்ல எம்.பி. வேண்டும் என்றால் எனக்கு வாக்களியுங்கள் என்று தெற்கு பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் ரூத் மனோரமா தெரிவித்து வருகிறார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெற்கு பெங்களூர் தொகுயில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் குடிசைவாசிகள் மற்றும் தலித் மக்களிடையே பிரபலமான தமிழச்சியான ரூத் மனோரமா போட்டியிடுகிறார்.
அவர் ஏழை, எளிய மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
பணம், பிரியாணி
உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை. மேலும் பிரியாணி வாங்கிக் கொடுக்கவும் முடியவில்லை. ஒரு நல்ல திறமையான எம்.பி. வேண்டும் என்றால் எனக்கு வாக்களியுங்கள் என்று ரூத் மக்களிடம் தெரிவித்து வருகிறார்.
ரூத் மனோரமா
ரூத் மனோரமா பெங்களூரில் உள்ள குடிசை வாசிகளுக்காக பாடுபடுபவர். குடும்ப பிரச்சனை, வரதட்சணை கொடுமை என்று பல்வேறு பிரச்சனைகளுக்கு தன்னுடைய குடிசைவாசிகள் கூட்டமைப்பு மற்றும் பெண்களின் குரல் ஆகிய அமைப்புகள் மூலம் தீர்வு கண்டு வருகிறார் அவர்.
திருநங்கை
சரண்யா என்ற திருநங்கை கூறுகையில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களை இதுவரை கண்டுகொள்ளவில்லை. ரூத் மனோரமா என்னைப் போன்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடுவார் என்றார்.
மதுக்கடை
லலிதா பாய் என்பவர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு பக்கத்தில் மதுக்கடை இருந்தது. அங்கு மது குடித்துவிட்டு குடிகாரர்கள் என் வீட்டு வாசலில் தூங்குவது, சண்டை போடுவது என்று அட்டகாசம் செய்தனர். அந்த கடையை அகற்ற ரூத் தான் உதவினார். அவரை அரிசயல்வாதியாக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
தேவே கவுடா
அரசியல் குறித்து ரூத் கூறுகையில், நான் அரசியல்வாதியாக விரும்பினேன். ஆனால் அதற்காக முயற்சி செய்யவில்லை. தெற்கு பெங்களூர் தொகுதியை எனக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஒதுக்கியபோது ஆச்சரியம் அடைந்தேன். தேவே கவுடா எனது பணிக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். நான் நகருக்காக பாடுபட்டுள்ளேன். இனி இந்த நகருக்காக நாடாளுமன்றத்திற்கு செல்ல விரும்புகிறேன் என்றார்.