'ஜனதா தர்பார்' நிகழ்ச்சியையே ரத்து செய்ய கேஜ்ரிவால் முடிவு!
டெல்லி: சர்ச்சையை ஏற்படுத்திய ஜனதா தர்பார் நிகழ்ச்சியையே ரத்து செய்ய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற அரவிந்த் கேஜ்ரிவால், சனிக்கிழமை தோறும் மக்கள் குறை கேட்கும் முகாம் (ஜனதா தர்பார்) நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதன்படி நேற்று முன்தினம் ஜனதா தர்பார் நடத்தப்பட்டது.
ஆனால் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு திரண்டதுடன் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த மூங்கில் தடுப்புகளை உடைத்து கேஜ்ரிவாலை நெருங்கினர். இதனால் அவரை மீட்க போலீசார் படாதபாடு பட்டனர்.
பின்னர் மீண்டும் வந்து மக்களிடம் மனுக்களை வாங்கினார். ஆனால் தொடர்ந்தும் கேஜ்ரிவால் நிகழ்ச்சியை நடத்த முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பாதியில் வெளியேறினார். இது கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்க ஜனதா தர்பார் நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்று கேஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.