முஸ்லிம் நீதிபதிகளே இல்லாத உச்ச நீதிமன்றம்... கே.ஜி பாலகிருஷ்ணன் கவலை
டெல்லி: நீதிபதிகள் கலிபுல்லா மற்றும் இக்பால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், முஸ்லிம் நீதிபதிகள் இல்லாத நீதிமன்றமாக உச்சநீதி மன்றம் மாறியுள்ளது. இப்படி இருப்பது கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதன் முறையாகும். கடந்த 30 ஆண்டுகளில் இது இரண்டாம் முறை.
நீதிபதி எம். ஒய். இக்பால் மற்றும் நீதிபதி பக்கீர் முகம்மது இப்ராகிம் கலிபுல்லா ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களில் நீதிபதி இக்பால் இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியும், நீதிபதி கலிபுல்லா ஜுலை 22ம் தேதியும் ஓய்வு பெற்றார்கள்.
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது. நீதிபதிகள் நியமனம் குறித்த மோதல் மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே நீடித்தும் வரும் நிலையில் முஸ்லிம் நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தில் நியமிக்க இன்னும் நாளாகலாம்.
தற்போது, இரண்டே இரண்டு முஸ்லிம்கள்தான் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக உள்ளனர். பிகார் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி, இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மன்சூர் அகமத் மிர் ஆகியோர் மட்டுமே தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர். இவர்களில் இக்பால் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். நீதிபதி மன்சூர் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன், "விரையில் முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். பல நாடுகளில் மதம், மொழி, இனம் சார்ந்த பிரதிநிதிகள் நீதிமன்றங்களில் இடம் பெறுவதற்கு உறுதி செய்யப்படுகின்றன." என்று தனது கவலை தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தற்போதுள்ள 28 நீதிபதிகளில் 7.5 சதவீதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும், நீதிபதிகள் எம். இதயத்துல்லா, எம். ஹிமீதுல்லா பக், ஏம். எம். அகமதி, அல்டமாஸ் கபிர் ஆகியோர் மட்டுமே தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர். நீதிபதி பாத்திமா பீவிதான் உச்ச நீதிமன்றத்தில் முதல் முஸ்லிம் பெண் நீதிபதியாவார். இவர் தமிழ்நாட்டின் கவர்னாராகவும் இருந்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 2003ம் ஆண்டு நீதிபதி எஸ். எஸ். எம். குவாட்ரி ஓய்வு பெற்றதில் இருந்து செப்டம்பர் 2005ம் ஆண்டு நீதிபதி அல்டமாஸ் கபீர் நீதிபதியாக நியமனம் செய்தது வரை இரண்டரை ஆண்டு காலம் முஸ்லிம் நீதிபதிகளே இல்லாமல் இருந்தது. இது 1988ம் ஆண்டிற்கு பின், நீண்ட காலம் முஸ்லிம் நீதிபதிகள் இல்லாத காலமாகும்.
இதற்கு மாறாக, டிசம்பர் 2012ம் ஆண்டில் இருந்து ஏப்ரல் 2013ம் ஆண்டு வரை உள்ள நான்கு மாதங்களில் அதிகபடியாக தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி அப்டப் அலாம், நீதிபதி இக்பால், நீதிபதி கலிபுல்லா என நான்கு முஸ்லிம்கள் நீதிபதிகளாக இருந்துள்ளனர்.