பெங்களூர் ஐடி நிறுவனங்களில் கன்னடர்களுக்கு அதிக வேலைகள் தராதது ஏன்?.. குமாரசாமி!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்பங்களில் 80 சதவீதம் பேர் வெளி மாநிலக்காரர்களாக உள்ளனர். 20 சதவீதம் பேர்தான் கன்னடர்களாக உள்ளனர் என்று கொதித்துள்ளார் முன்னாள் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி.
பெங்களூருக்கு உயிர் நாடியாக இருப்பது இந்த ஐடி நிறுவனங்கள்தான்.
ஆனால் இங்கு கன்னடர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை குமாரசாமி முன்வைத்துள்ளார்.
ஏன் கன்னடர்களுக்கு வேலை தருவதில்லை
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 80 சதவீதம் பேர் கன்னடர் அல்லாதவர்கள்தான். 20 சதவீதம் பேர் மட்டுமே கன்னடர்கள். ஏன் கன்னடர்களுக்கு இவர்கள் வேலை தருவதில்லை...
சலுகைகளை மட்டும் வாங்கிக் கொண்டு
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குடிநீர், மின்சாரம், நிலம், மானியம் என சலுகைகளை அதிக அளவில் பெறுகின்றன. ஆனால் வேலையை மட்டும் கன்னடர் அல்லாதவர்களுக்குத் தூக்கிக் கொடுக்கிறார்கள்.
கன்னடர்களுக்கு என்னதான் உள்ளது
இப்படி பிற மொழிக்காரர்களுக்கு அனைத்தையும் கொடுத்து விட்டு, மண்ணின் மைந்தர்களான கன்னடர்களுக்கு என்னதான் கொடுக்கிறார்கள் இவர்கள்...என்றார் கோபமாக.
எல்லாத்துக்கும் நான் தான் காரணம்-கெளடா
இதற்கிடையே, குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா கூறுகையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான், அதிலும் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோதுதான் இத்தனை ஐடி நிறுவனங்களையும் பெங்களூருக்கு அழைத்து வந்தார் என்பது தவறு. நான் தான் அதற்கான அனுமதியைத் தந்து, நிலங்களையும் ஒதுக்கினேன். ஐடி பூங்காக்களுக்கு அனுமதி தந்தேன். 10 வருடத்திற்கு வரி விலக்கு அளித்தேன் என்றார் அவர்.
ஏன் இப்படிப் பேசுறாங்க ரெண்டு பேரும்...
திடீரென கெளடாவும், அவரது மகனும் ஐடி நிறுவனங்கள் மீது பாய்ந்திருப்பதற்கு வரப் போகும் லோக்சபா தேர்தலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்படிப் பேசினால்தான், கன்னட வாக்குகளைக் கவர முடியும் என்று இருவரும் பேசுவதாகவும் பலமாக சந்தேகிக்கப்படுகிறது.