குஜராத் ராஜ்யசபா தேர்தலில் 'நோட்டா' வாய்ப்பு.. ராஜ்யசபாவில் புயலைக் கிளப்பிய காங்கிரஸ்!
குஜராத் ராஜ்யசபா தேர்தலில் நோட்டா வசதி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
டெல்லி: பெங்களூருவுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு வசதியாக, குஜராத் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்னும் நோட்டா' வசதி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8 ம் தேதி நடக்கிறது. பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஆனால், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் அகமதுபடேல் எளிதாக வெல்ல முடியும் நிலை இருந்தது. ஆனால் காங்கிரஸிலிருந்து விலகிய மூத்த தலைவர் வகேலா 11 எம்.எல்.ஏக்களை தன்னுடைய பிடியில் வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். அத்துடன் அடுத்தடுத்து 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினமா செய்தும் வருகின்றனர்.
எம்எல்ஏக்கள் கடத்தல்
இதனால் பீதியடைந்த காங்கிரஸ் மேலிடம் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூருவுக்கு கடத்திச் சென்றுள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தல் கமிஷனின் அறிவுரைகளின்படி, குஜராத் ராஜ்யசபா தேர்தலில், நோட்டா வசதி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டா குண்டு
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 2013ம் ஆண்டில் ராஜ்யசபா தேர்தலில், நோட்டா வசதி ஏற்படுத்தப்பட்டது. எனினும், 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் தான், ஆந்திர எம்.எல்.ஏ., டகுபதி வெங்கடேஸ்வர ராவ் தான் முதலில், நோட்டா வசதியை பயன்படுத்தினார். அதபோல், தற்போது, அதிருப்தியில் இருக்கும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், அகமது பட்டேலுக்கு ஓட்டளிக்க விரும்பாவிட்டால், நோட்டாவை பயன்படுத்த முடியும். இதன் மூலம் கட்சியின் கொறடா உத்தரவை மீறிய பிரச்னை எழாது, பதவியும் பறிபோகாது.
காங்கிரஸ் அமளி
நோட்டா அறிவிப்பால் ராஜ்யசபாவில் இன்று காங்கிரஸ் கடும் புயலைக் கிளப்பியது. ராஜ்யசபாவின் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, அரசியலமைப்பு படியோ, தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றியோ நோட்டா முறையை அறிமுகம் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஜேட்லி விளக்கம்
இதற்கு பதிலளித்த நிதியமைச்சரும் அவைத்தலைவருமான அருண்ஜேட்லி, உச்சநீதிமன்றம் நோட்டாவை ராஜ்யசபா தேர்தலில் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளதாக கூறினார். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இந்த தீர்ப்பு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தனிச்சட்டமா?
இதனையடுத்து ராஜ்யசபாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் குஜராத்திற்கு மட்டும் ஏதேனும் தனிச்சட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இது ஒரு மிக முக்கியமான பிரச்னை என்றும் குலாம் நபி ஆசாத் சுட்டிக்காட்டினார்.