தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சி பற்றியே வாயை திறக்கலையே.. இப்ப மட்டும் எப்படி?
வளர்ச்சி பற்றி பிரசாரத்தில் வாயே திறக்காத பாஜக இப்போது தேர்தல் வெற்றிக்கு மட்டும் வளர்ச்சியே காரணம் என்கிறது.
டெல்லி: குஜராத்தில் பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு காரணமே வளர்ச்சி...வளர்ச்சிதான் என பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் முழங்குகிறார்கள். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் ஒரே ஒரு முறை கூட வளர்ச்சியை பற்றி பிரதமர் மோடி வாயே திறக்கவில்லை என்பதுதான் உண்மை.
குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலம்; இந்தியாவையும் குஜராத் போல மாற்றுவோம் என 2014 லோக்சபா தேர்தலில் பிரமாண்ட பிரசாரம் செய்தது பாஜக. இந்த பிரசாரத்துக்கு பலனும் கிடைத்தது.
பாஜக தோல்வி
ஆனால் காலப் போக்கில் குஜராத்தில் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட பொய் பிரசாரம் என்பது அம்பலமானது. தேசிய அளவிலும் மிகப் பெரிய வளர்ச்சியை பாஜக அரசால் ஏற்படுத்தித் தர முடியவில்லை.
வாயே திறக்கலை பாஜக
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருந்தனர். இதை உணர்ந்துதான் குஜராத் சட்டசபை தேர்தலில் வளர்ச்சி என்பது குறித்து வாயே திறக்கவில்லை பாஜக.
வளர்ச்சி பற்றி பேச்சு இல்லை
பிரதமர் நரேந்திர மோடி தம்முடைய பிரசாரத்தில் ராகுல் காந்தியின் பெயரை 621 முறை உச்சரித்தார். ஆனால் ஒரே ஒரு முறை கூட மறந்தும் வளர்ச்சி பற்றி வாயே திறக்கவில்லை.
வளர்ச்சி காரணமாம்
இப்போது தப்பித்தோம் பிழைத்தோம் என ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது பாஜக. இந்த நூலிழை வெற்றிக்கும் காரணம் வளர்ச்சி என திருவாய் மலர்கின்றனர் பிரதமர் மோடியும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும். அரசியலில் மிகப் பெரிய நகைச்சுவை தான்!