வாக்கு வேட்டைக்கு காங். இன்னொரு அதிரடி.. 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் உயர்த்தப்படுகிறது!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் மற்றொரு அதிரடியாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு கை கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுவது 100நாள் வேலை வாய்ப்பு திட்டம்தான். இத்திட்டம் கிராமப்புற ஏழை மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றதால் கணிசமான வாக்குகளை காங்கிரசால் அறுவடை செய்ய முடிந்தது.
தற்போது அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்ளிட்ட பல திட்டங்களை காங்கிரஸ் அரசு அறிவித்திருக்கிறது.
நடப்பாண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ33 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் கடந்த தேர்தலில் கை கொடுத்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீரமைத்து ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக தேசிய புள்ளிவிவர கமிஷன் தலைவர் பிரோணப் சென் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழு தற்போது கலைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இந்திரா காந்தி தேசிய வளர்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தர் மகேந்திர தேவ் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவை 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியம் கணிசமாக உயர உள்ளது.
ஊதிய உயர்வுடன் கணிசமான வாக்கு வேட்டையும் நடக்கும்!!