மே.வங்க உருளைக்கிழங்கு.. உளைச்சலில் ஒடிஷா பாஜக அரசு! 'விளைச்சல்' அதிகரிக்க விஞ்ஞானிகளுக்கு அழைப்பு!
புவனேஸ்வர்: ஒடிஷா மாநில அரசு இனி உருளைக்கிழங்குக்காக மேற்கு வங்க மாநிலத்தை மட்டுமே நம்புவதில்லை என அதிரடியாக முடிவு செய்துள்ளது. ஒடிஷாவிலேயே மிக அதிகளவு உருளைக்கிழங்கு சாகுபடியை மேற்கொள்வதற்காக அனைத்து வேளாண் விஞ்ஞானிகள், மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி "உருக்கமான" வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒடிஷா மாநிலத்துக்கு 'உருளைக்கிழங்கு'தான் பெரும் குடைச்சலாக இருந்து வருகிறது. உருளைக்கிழங்கு அரசியல்தான் இப்போது ஒடிஷா- மேற்கு வங்க மாநிலங்களிடையேயான மோதலையும் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவிலேயே உருளைக்கிழங்கு சாகுபடி அதிகமாக உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம். இதற்கு அடுத்ததாக 2-வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம். ஒடிஷாவில் உருளைக்கிழங்கு பயன்பாடும் அதிகம். இதனால் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து உருளைக்கிழங்கு 'இறக்குமதி' செய்யப்பட்டு வந்தது.
அண்மையில் மேற்கு வங்க லாரி உரிமையாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தை முன்வைத்து ஒடிஷாவுக்கு உருளைக்கிழங்கு 'ஏற்றுமதி'யை நிறுத்த முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டார். அப்போது தொடங்கியதுதான் இந்த உருளைக்கிழங்கு அரசியல்.
ஒடிஷாவில் ஆளும் பாஜக அரசுக்கு உருளைக்கிழங்கு விலை உயர்வு கடும் நெருக்கடியையும் கொடுத்தது. பொதுவாக 1 கிலோ உருளைக்கிழங்கு ரூ40-க்கு விற்பனையான நிலையில் தட்டுப்பாடு காரணமாக 1 கிலோ விலை ரூ80ஐ தாண்டியது. இதனால் ஒடிஷா மாநில அரசு உருளைக்கிழங்குக்காக உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை நாடியது. ஆனால் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகம் என்பதால் தொடர்ந்து உருளைக்கிழங்கு விலை உயர்வானதாகவே இருந்தது.
இந்த உருளைக்கிழங்கு விவகாரத்தில் ஒடிஷாவின் எதிர்க்கட்சியான பிஜூ ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்கும் களமாடினார். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு தேவையான உருளைக்கிழங்கு விநியோகம் செய்ய வேண்டும் என நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார். ஆனால் நவீன் பட்நாயக்தான் தமது 25 ஆண்டுகால ஆட்சியில் உருளைக்கிழங்கு சாகுபடியை மேம்படுத்த தவறிவிட்டார் என பாஜக குற்றம்சாட்டியது. இதனால் ஒடிஷாவில் உருளைக்கிழங்கு அரசியல் உச்சத்தை எட்டியது.
இந்தப் பின்னணியில்தான் தற்போது ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி ஒரு முக்கியமான வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். அதாவது இனிமேல் மேற்கு வங்கத்தை உருளைக்கிழங்குக்காக நம்பிக் கொண்டிருக்க கூடாது; ஒடிஷா மாநிலத்திலேயே போதுமான அளவு உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட வேண்டும்; இதற்காக வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் மாணவர்கள் அனைவரும் விவசாயிகளுக்கு உதவ வாருங்கள் என்பதுதான் இந்த வேண்டுகோள். முந்தைய நவீன் பட்நாயக் ஆட்சியிலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது வெற்றி பெறாத நிலையில் தற்போதைய பாஜக அரசு உருளைக்கிழங்கு சாகுபடிக்காக தீவிரம் காட்டுகிறது!
உருளைக்கிழங்கு அரசியலால் எவ்வளவு உளைச்சல்!












Click it and Unblock the Notifications