தனக்கு மயக்க மருந்து கொடுத்த திருடனை சாமர்த்தியமாக போலீசில் மாட்டி விட்ட டெல்லி பாட்டி!
தன்னை ஏமாற்றி திருடிச் சென்ற திருடனை பாதிக்கப்பட்ட பாட்டியே போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளார்.
Recommended Video
டெல்லி : மயக்க மருந்து கொடுத்து தன்னிடம் நகை பறித்த திருடனை, 60 வயது பாட்டி ஒருவர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு போலீசில் பிடித்துக்கொடுத்த சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த 60 வயது மூதாட்டி விஜயசாதேவ், கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று, ஹரி நகர் செல்வதற்கு உத்தம் நகர் பேருந்து நிலையம் சென்றார். அங்கு பகல் சுமார் 11.30 மணி அளவில் அவரிடம் பேச்சு கொடுத்த விக்கி என்கிற இளைஞர், தானும் ஹரி நகர் தான் செல்வதாகக் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய பெற்றோர் சமீபத்தில் இறந்துவிட்டதாகவும், விஜயசாதேவை பார்க்கும் போது தனது அம்மாவை பார்ப்பது போல் இருக்கிறது எனவும் விக்கி கூறியுள்ளான். கூடவே தனக்கு இன்று பிறந்தநாள் என்று கூறிய விக்கி, பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை நீட்டி, அதில் இருந்து ஒன்றையாவது சாப்பிட வேண்டும் என விஜயசாதேவை அன்புத்தொல்லை செய்துள்ளான்.
பேச்சில் மயங்கி
விக்கியின் உணர்வுப்பூர்வமான பேச்சில் மயங்கிய விஜயசாதேவ், அந்த பாக்கெட்டில் இருந்து ஒரேயொரு பிஸ்கெட்டை மட்டும் எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அவர் விக்கியுடன் சேர்ந்து ஹரி நகர் செல்லும் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் விஜயசாதேவ் மயக்கமடைந்துவிட்டார்.
ஆட்டையைப் போட்ட வாலிபன்
சுமார் ஒரு மணி நேரம் கழித்து விழித்தபோது, தமது காதணி மற்றும் பர்ஸ் ஆகியவை களவு போனது தெரியவந்து விஜயசாதேவ் அதிர்ச்சி அடைந்தார். மூதாட்டியில் செல்போனை மட்டும் விட்டுவிட்டு, பர்சையும், காதணியையும் விக்கி திருடிச் சென்றுவிட்டான். உடனடியாக இந்த சம்பவம் பற்றி விஜயசாதேவ் போலீசில் புகார் அளித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி விட்டார்.
காத்திருந்து பிடித்த பாட்டி
இந்த திருட்டு சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட விஜயசாதேவ், எப்படியும் திருடனைப் போலீசில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என எண்ணினார். இதற்கான இரு தினங்களுக்கு பிறகு தமது மகனுடன் காரில் சென்று உத்தம் நகர் பேருந்து நிலையம் எதிரே அவர் காத்திருந்தார்.
கூச்சல் போட்டு ஊரைக் கூட்டி
விஜயசாதேவின் நல்ல நேரமா அல்லது அந்த திருடனின் கெட்ட நேரமா எனத் தெரியவில்லை. அன்றும் கையில் பிஸ்கெட் பாக்கெட்டுடன் விக்கி மற்றொரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்துள்ளான். இதைப் பார்த்து விஜயசாதேவ் கூச்சலிட்டார். இதையடுத்து, பாட்டியின் மகன் மற்றும் அங்கிருந்தவர்கள், விக்கியை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
செம பாட்டி
தம்மிடம் நகை பறித்த திருடனை, தானே பிடித்து போலீசில் ஒப்படைத்த 60 வயது பாட்டியை அனைவரும் பாராட்டினர். அவருக்கு காவல்துறை சார்பில் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.