ஜம்மு காஷ்மீர்: மோடி நடத்திய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் ஒமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக அம்மாநிலத்தில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா புறக்கணித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு ஒரு நாள் பயணமாக இன்று காலை வருகை தந்தார் பிரதமர் நரேந்திரமோடி. டெல்லியில் இருந்து ஜம்முவிற்கு விமானத்தில் வந்திறங்கிய, நரேந்திரமோடி அங்கிருந்து கட்ரா பகுதிக்கு சென்றார். அங்கு கட்ரா-உதம்பூர்-டெல்லி ரயில்சேவையை துவங்கி வைத்தார். இதையடுத்து ஸ்ரீநகர் சென்ற நரேந்திரமோடி அங்கு, பாதாமிபாக் கண்டோன்மென்ட் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு குறித்து உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில ஆளுநர் என்.என்.வோரா, வடக்கு மண்டல ராணுவ கமாண்டன்ட் டி.எஸ்.ஹூண்டா, லெப்டினன்ட் ஜெனரல்கள் கே.எச்.சிங், சுப்ரதா ஷா, நேகி, உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால், மாநில முதல்வரான ஒமர் அப்துல்லா இதில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலின்போது, நரேந்திரமோடிக்கு எதிராக, தீவிர பிரச்சாரம் செய்தவர் ஒமர் அப்துல்லா. சமீபத்தில்கூட, பாஜகவுக்கு சவால்விடும் வகையில் பேசிய அவர், நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து வெற்றி பெற்றால் நான் அரசியலைவிட்டே விலகிவிடுவேன் என்றார். எனவே மோடியைவிட்டு சற்று விலகி இருக்கவே ஒமர் அப்துல்லா விரும்புகிறார். இதன் காரணமாக பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை அவர் புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரம் கட்ரா ரயில் இயக்க துவக்க நிகழ்ச்சியில் ஒமர் அப்துல்லா பங்கேற்றார். மோடிக்கு மலர் கொத்து கொடுத்து அவர் வரவேற்றார்.