15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
மத்திய நிதிக்குழு தலைவருடன் டெல்லியில் தமிழக துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
டெல்லி: மத்திய நிதிக்குழு தலைவருடன் டெல்லியில் தமிழக துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
தற்போது புதிதாக 15வது நிதிக் குழு அறிமுகப்படுத்தபட்டுள்ளது.இந்த பரிந்துரைபடி, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வார்கள். அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்கள் இதனால் அதிக பலன் அடையும். ஆனால் அதிக வரி கட்டும் குறைந்த மக்கள் தொகை கொண்ட தென் மாநிலங்கள் வருவாய் இழப்பையும் சந்திக்கும்.
இது தென்மாநிலங்களுக்கு செய்யப்படும் பெரிய அநீதி என்று கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகியவை கண்டன குரல் எழுப்பி இருந்தது. இதுகுறித்து இவர்கள் ஒன்றாக கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் இதில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து விவாதம் நடத்த மத்திய நிதி குழு தலைவருடன் டெல்லியில் தமிழக துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தி இருக்கிறார். அதில் அவர் 15வது நிதிக் குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு என்ன பிரச்சனை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அவரை சந்தித்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ''15வது நிதி குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு 40,000 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளதை தெரிவித்தோம். தமிழகத்துக்குரிய நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினோம்.'' என்று தெரிவித்துள்ளார்.