எல்லையில் ஊடுருவத் தயார் நிலையில் 1,000 தீவிரவாதிகள்... இந்திய ராணுவ அதிகாரி எச்சரிக்கை
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரின் கவினி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவன், திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தினான்; பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் அந்த தீவிரவாதி கொல்லப்பட்டான்.
அவன் உடலை கைப்பற்றி, அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்ததில், அவன், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜஹாங்கீர் அகமது கனி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் ஸ்ரீநகரில் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ராணுவ உயர் அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா கூறியதாவது... பாகிஸ்தான், தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது. அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன், ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள், முகாம்கள் அமைத்து ஆயுதப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இடங்களில், 1,150 பயங்கரவாதிகள் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளனர்.
பாகிஸ்தானில், 17 தீவிரவாத முகாம்களில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களில், 325 பேர், எந்த நேரத்திலும் நம் நாட்டில் நுழையும் அபாயம் உள்ளது. தீவிரவாதிகள் பலமுறை ஊடுருவ முயன்றும், நம் வீரர்களின் பதிலடியால், அவர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்தபடியே, ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதத்தை ஆதரிப்பது மட்டுமின்றி, தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, இந்தியாவிற்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபடச் செய்யும் பணியில், பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.