இலங்கையை போல இந்திய பிரதமர் பங்களாவுக்குள்ளும் மக்கள் நுழையத்தான் போகிறார்கள்.. எச்சரிக்கும் ஓவைசி
ஜெய்ப்பூர்: இலங்கையில் நிகழ்ந்ததைப் போல இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாவுக்குள் மக்கள் ஆவேசமாக நுழையத்தான் போகிறார்கள் என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான ஓவைசி கடுமையாக எச்சரித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.

மக்கள் கிளர்ச்சி
இதனால் கிளர்ந்தெழுந்த மக்கள் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் என அனைத்தையும் கைப்பற்றி மக்கள் சக்தியை நிரூபித்தனர். இதனையடுத்தே ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியை விட்டு விலகினர். அதிலும் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே, இலங்கையைவிட்டே தப்பி ஓடிவிட்டார். இப்போது சிங்கப்பூரில் கோத்தபாய ராஜபக்சே பதுங்கி இருக்கிறார். கோத்தபாய ராஜபக்சே சிங்கப்பூரிலேயே தங்கி இருப்பாரா? அல்லது அங்கிருந்து இலங்கைக்கு மீண்டும் திரும்பி வருவாரா? என்பது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ரணில் ஆட்சி காலம்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றதும் மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை ஒடுக்குவதில் தீவிரமாக உள்ளார். இதனால் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக அதிருப்தி வெடித்திருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளாள் இலங்கையில் தற்போது போராட்டத்தின் தீவிரதன்மை குறைந்துள்ளது. ஆனால் இலங்கையின் பொருளாதார சிக்கல்கள் இம்மி அளவும் குறையவும் இல்லை.

மஜ்லிஸ் கட்சி ஓவைசி
இதனிடையே இலங்கையின் நிலைமைகளை ஒப்பிட்டு மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி எம்.பி. தொடர்ந்து பேசி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஓவைசி பேசியதாவது: நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். அப்படியான சூழ்நிலைகள் இங்கே உள்ளன. இலங்கையில் ஜனாதிபதியின் மாளிகைக்குள் மக்கள் நுழைந்ததைப் போல இந்தியாவிலும் பிரதமர் பங்களாவுக்குள் மக்கள் கொதித்தெழுந்து உள்ளே நுழையக் கூடிய காலம் வரும்.
Recommended Video

முஸ்லிம் சமூகம்
இந்தியாவில் இந்து-முஸ்லிம் அரசியல் பிரச்சனையில் ஒரே ஒரு சமூகத்துக்கு மட்டும் இழப்பு. இப்பிரச்சனையால் முஸ்லிம் சமூகத்துக்குதான் இழப்பு. மதத்தின் பெயரால் தத்துவங்கள் பெயரால் மோதல்களை உருவாக்க சில சக்திகள் விரும்புவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். அந்த சக்திகள் யார் என்பதை அஜித் தோவல் பகிரங்கப்படுத்த வேண்டும். இவ்வாறு ஓவைசி கூறினார்.












Click it and Unblock the Notifications