பாகிஸ்தானுக்கு வந்தா ரத்தம்.. இந்தியாவுக்கு வந்தா தக்காளி சட்னியா?
டெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு பல உயிர்களை பலிகொடுத்துவிட்ட இந்தியா அதற்கு காரணமான தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு கேட்டபோது மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், இப்போது பெஷாவர் தாக்குதலுக்கு காரணமான தெரிக் ஐ தாலிபான் தீவிரவாத இயக்க தலைவன் மவுலானா பஸ்லுல்லாவை பிடிக்க ஆப்கானிஸ்தான் உதவியை நாடியுள்ளது.
பெஷாவரில் பள்ளிக் குழந்தைகளை ஈவு, இரக்கமின்றி கொலை செய்த தீவிரவாத இயக்கம் தெரிக் ஐ தாலிபான். இதன் தலைவன் மவுலானா பஸ்லுல்லா, ஆப்கனில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப், நேற்றே ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டார்.
மவுலானாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி ஆப்கன் அரசை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இதேபோன்றதொரு கோரிக்கையை இந்தியா வெகுகாலமாக பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டிருக்கும்போது காது கேளாதவனை போல பாகிஸ்தான் பாசாங்கு செய்து வந்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தீவிரவாதி ஹபீஸ் சையது. லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவரான இவர் தற்போது ஜமாத்-உத்-தவா என்ற மற்றொரு அமைப்பை நடத்தி வருகிறார். இவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
அமெரிக்கா, இவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணையித்துள்ளது. ஆனாலும் அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வருகிறார். ஹபீஸ் சயீத், அவ்வப்போது இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை கூறி வருகிறார்.
1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவர் தாவூத் இப்ராஹிம். அவரும் கராச்சியில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகிறார். 20 வருடமாக கெஞ்சி கேட்டும், தாவூத்தை தருவதாக இல்லை பாகிஸ்தான். ஆனால் இப்போது பெஷாவரில் தாக்குதல் நடந்த மறுநாளே காபூலில் ராணுவ தளபதி சென்றிறங்கியுள்ளார்.
ஒருவேளை இந்திய மண்ணில் சிந்தியது தக்காளி சட்னி என்றும், பாகிஸ்தானில் மட்டுமே ரத்தம் சிதறியுள்ளது என்றும் அந்த நாடு நினைத்துவிட்டது போலும்.