காஷ்மீர் எல்லையில் பாக். உடனடியாக துப்பாக்கி சூட்டை நிறுத்த வேண்டும்- ராஜ்நாத்சிங் 'வார்னிங்'!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் உடனடியாக துப்பாக்கி சூட்டை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீரில் சர்வதேச எல்லையில் அர்னியா சப்-செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு முதல் தானியங்கி ஆயுதங்கள், சிறிய ரக மோட்டார் பீரங்கிகளைக் கொண்டு கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
5 பேர் பலி- 35 பேர் படுகாயம்
இந்த தாக்குதலில் மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டை நிறுத்துக
எல்லையில் பாகிஸ்தானின் அடாவடிக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் எல்லையில் பாகிஸ்தான் உடனடியாக துப்பாக்கி சூட்டை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ராஜ்நாத்சிங்
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்ததை பாகிஸ்தான் மீறுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவில் தற்போது நிலைமை மாறியுள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும். எல்லை நிலவரத்தை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஜம்மு காஷ்மீர் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
ரஷீத் ஆல்வி
பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது மிகவும் முக்கியமான பிரச்சனை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், பாகிஸ்தான் என்ன செய்தாலும், அது மிகவும் முக்கியமான பிரச்சனை. இத்தகைய செயல்களில் ஈடுபடுவது அந்நாட்டிற்கு நல்லது இல்லை என்பதை நாம் பாகிஸ்தானுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
சல்மான் குர்ஷித்
பாகிஸ்தான் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ஈகைத் திருநாளான இன்று இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது மிகவும் வெறுக்கத்தக்கது. இதை விட எதுவும் மோசமாக இருக்க முடியாது என்றார்.