பாலியல் வன்கொடுமைகள் - 150 மாணவிகளுக்கு கல்வி கற்க தடை விதித்த உ.பி. கிராமம்
கான்பூர்: பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தங்கள் பெண்களைப் பாதுகாக்கும் வகையில், உத்திரப்பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சுமார் 150 மாணவிகள் தற்காலிகமாக பள்ளி, கல்லூரி செல்ல அக்கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேசம் கான்பூர் பகுதியில் உள்ளது ட்யோங்கா கிராமம். இக்கிராமத்தில் இருந்து சுமார் 150 மாணவிகள் அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். கல்விக்காக கிராமத்தை விட்டு வெளியே செல்லும் இப்பெண்கள் நீண்டகாலமாக பாலியல் ரீதியான சித்ரவதைகளுக்கு ஆளாவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லூரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இரு மாணவிகளை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து சில்மிஷம் செய்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
போலீசாரின் இந்த அலட்சியப்போக்கை எதிர்த்து ட்யோங்கா கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கும் என ஏஎஸ்பி ரிஷிபால் சிங் அளித்த வாக்குறுதியின் படி போராட்டம் கை விடப்பட்டது.
ஆனபோதும், போலீசார் தங்கள் கிராம மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை எனக் கருதும் கிராம மக்கள், தாங்களாகவே இதற்கு ஒரு தீர்வு காண முடிவு செய்தனர். அதன்படி, தங்கள் கிராம பெண்கள் கல்வி கற்பதாக வெளியில் செல்ல வேண்டாம் என பஞ்சாயத்து மூலமாக அறிவுறுத்தியுள்ளனராம்.
இதனால், அக்கிராமத்திலிருந்து மாணவிகள் யாரும் கல்வி கற்க பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லவில்லை. இதனால், வகுப்பறைகளில் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மாணவிகளை கிண்டல் செய்ததாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுமார் 150 மாணவிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு பயந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லக்கூடாது என பஞ்சாயத்தார் தடை விதித்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.