நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்.. சூடு பறக்குமா?
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. வழக்கம்போல இந்த கூட்டத் தொடரிலும் அனல் பறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக்கள் அதாவது 67 மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் ஆளும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி உத்தரவி்ட்டுள்ளார்.
இந்தக் கூட்டத் தொடர் ஒரு மாத காலத்திற்கு அதாவது டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 21 அமர்வுகள் இடம் பெறும் என்று தெரிகிறது.
லோக்சபாவில் காலை 11 மணிக்கு அமர்வு தொடங்கும், அதாவது கேள்வி நேரம் தொடங்கும். அதேசமயம், ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தை 12 மணிக்கு மாற்றியுள்ளனர்.
சிக்கலில் பாஜக
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தமாக 67 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதில் அதிகபட்சமாக 59 மசோதாக்கள் ராஜ்யசபாவில் உள்ளன. இவைற்றை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்குத் தேவை.
எனவே அவர்களின் ஆதரவைப் பெற்று முக்கிய மசோதாக்களை படிப்படியாக நிறைவேற்ற பாஜக முயலும் என்று தெரிகிறது.