தீவிரவாதியை சுட்டு கொன்ற போலீசை கண்டித்து கடையடைப்பு நடத்திய மக்கள்.. காஷ்மீரில்தான் இந்த நிலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்றதை கண்டித்து பொதுமக்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதுடன், கடையடைப்பும் நடத்தினர்.
மாநில பாதுகாப்பின் அடித்தளத்தில் இருக்கும் ஓட்டையை கண்கூடாக காட்டும் இந்த சம்பவம் பற்றிய விவரம் இதுதான்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கர்னல் நல்லா குத் பகுதியில் தீவிரவாதி ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார், பஸ் ஒன்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிக்கிய தன்வீர் ஹுசைன் ஷேக் என்ற தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசார் மீது அவன் தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக அவனை சுட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து பிஸ்டல், ஏகே-47 ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
அவன், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், 2003ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் ஓராண்டிற்கு பின் விடுதலை செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் கடந்த மாதம் ஸ்ரீநகரில் மூன்று போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவன் என்றும் தெரியவந்தது.
ஆனால், தீவிரவாத இயக்கத்தோடு சம்மந்தப்பட்ட அவன் தற்போது திருந்தி குடும்பத்தோடு வாழ்ந்து வந்ததாக கொல்லப்பட்டவனின் சகோதரர் மீடியாக்களிடம் தெரிவித்தார். எனவே இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, பெமினா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடையடைப்பில் ஈடுபட்டனர்.