ஜல்லிக்கட்டு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.. சுப்ரீம்கோர்ட்டில் பீட்டா மனு தாக்கல்
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிக்கையை ரத்து செய்ய கோரி பீட்டா விலங்குகள் நல அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
உச்சநீதிமன்ற தடைக்கு உள்ளானதால் தமிழகத்தின் பாரம்பரியம்மிக்க ஜல்லிக்கட்டு திருவிழா கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில், தமிழக அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு, இவ்வாண்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதியளித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிவிக்கைக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பீட்டா என அழைக்கப்படும், விலங்குகள் நல அமைப்பும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதை அவசர வழக்காக எடுக்கவும் பீட்டா கேட்டுக்கொண்டுள்ளது.
விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகவும், 2010 முதல் 2014ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 1100 பேர் ஜல்லிக்கட்டால் காயமடைந்துள்ளதாகவும், 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் ஒரு குழந்தையும் அடங்கும் என்றும் பீட்டா அதன் மனுவில் தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு 3 காளை மாடுகள் இறந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விலங்குகள் நல வாரிய மனுவோடு சேர்த்து பீட்டா தாக்கல் செய்துள்ள இந்த மனு மீதான விசாரணையும் நாளை சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.