2 நாளுக்குள்ள யாரும் அவசரப்பட்டு பெட்ரோல் போடாதீங்க... லிட்டருக்கு 2 ரூபாய் குறையுமாம்!
சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடைசியாக பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 1ம் தேதி மாற்றி அமைத்தன.
அப்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 குறைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. இதையடுத்து பெட்ரோல் விலையை மீண்டும் குறைப்பதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டிவிட்டர் தளத்தில் பெட்ரோல் விலை ஆகஸ்ட் 14ம்தேதி நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ. 1.89 முதல் 2.38 வரையில் குறையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
2010ம் ஆண்டிலிருந்து, பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயத்தில் அரசுக்கு இருந்த அதிகாரம், பொதுத்துறை எண்ணை நிறுவனங்களுக்கு கைமாற்றிவிடப்பட்டது. எனவே பெட்ரோல் விலை குறைப்பு, அல்லது அதிகரிப்பு குறித்து முன்கூட்டியே அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காது. திடீரென கூடும், குறையும்.
ஆனால் அமைச்சர் ஒருநாள் முன்பாகவே விலை குறைப்பு குறித்து அறிவித்துவிட்டதால் சுதந்திரதினம் வரை எப்படியாவது பெட்ரோல் போடாமல் வண்டியை ஓட்டிவிட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மனக்கோட்டை கட்டிவருகிறார்கள். சுதந்திர தினத்தன்று மிட்டாய் வாங்க கியூவில் நிற்கிறோமோ இல்லையோ, பெட்ரோல் பங்கில் பெரும் கூட்டம் நிற்கப்போவது உறுதியாகிவிட்டது.