பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1-ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் 7.1 என்ற ரிக்டர் அளவிலும், ஆப்கானிஸ்தானில் 5.4 என்ற அளவிலும் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீட்டு சுவர் விரிசல் ஏற்பட்டதோடு ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைந்தன.பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் லுசோன் தீவில் மலைகள் சூழ்ந்த அப்ரா மாகாணம் உள்ளது. இது தலைநகர் மணிலாவில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை திடீரென்று அப்ரா மாகாணத்தின் டோலோரஸ் பகுதியில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
மேலும், வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததோடு, வீட்டு சுவர்களில் விரிசல் விழுந்தது. அப்போது தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் உணர்ந்தனர். மேலும் பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய பிறகு பொதுவெளியிலேயே நின்றனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீஸ் மேஜர் எட்வீன் செர்ஜியோ கூறுகையில், ‛‛நிலநடுக்கத்தால் போலீஸ் நிலைய சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு, பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை'' என்றார்.

நிலநடுக்கத்தால் சுனாமி வருகிறதா?
இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வகம் கூறுகையில், ‛‛வடக்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.8 ரிக்டர் முதல் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்
இதேபோல், ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. பைசாபாத்தில் இருந்து 89 கிலோமீட்டருக்கு தெற்கே இன்று அதிகாலை 2.07 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பீதி நிலவியது.
மேலும் பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பாகிஸ்தான் வானிலை துறை டுவிட் மூலம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானும்- நிலநடுக்கமும்
இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தில் 10 பேர் காயமடைந்தனர். ஜூன் மாதம் நாட்டின் கிழக்குப் பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1000 பேர் பலியாகினர். கடந்த ஜனவரியில் ஆப்கானிஸ்தானில் மேற்கு மாகாணமான பட்கியில் உள்ள கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் ஏராளமான மக்கள் இறந்தனர். இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்றாக உள்ள நிலையில் இன்று ஏற்பட்ட நிலஅதிர்வில் அதிர்ஷ்டவசமாக பலி இல்லை.












Click it and Unblock the Notifications